ஜோதி தரிசனத்தை பார்க்க ஆவலாக இருக்கிறேன்...இருமுடிகட்டி ஐயப்ப தரிசனம் செய்த விக்னேஷ் சிவன்...
நயன் தாராவின் காதலரான விக்னேஷ் சிவன் சபரிமலைக்கு மாலைப்போட்டு இருமுடிக்கட்டி சென்று தனது நேர்த்திக்கடனை நிறைவேற்றியுள்ள காணொளி, புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். 2 ஆண்டு காணாத ஜோதி தரிசனத்தை காண ஆவலாக இருப்பதாக தெரிவித்துள்ளார். அதற்கு கீழே ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

பன்முகத்தன்மை கொண்ட இயக்குநர் விக்னேஷ் சிவன்
விக்னேஷ் சிவன் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர். இவர் சிம்புவை வைத்து போடா போடி படத்தை இயக்கினார். விஜய் சேதுபதி, பார்த்திபன், நயன்தாரா, ஆர்.ஜே.பாலாஜியை வைத்து நானும் ரவுடிதான் என்கிற படத்தை எழுதி இயக்கினார். சூர்யாவை வைத்து தானா சேர்ந்த கூட்டம் படத்தை திரைக்கதை எழுதி இயக்கினார். தற்போது விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தாவை வைத்து 'காத்துவாக்குல ரெண்டு காதல்' என்ற படத்தை இயக்கி வருகிறார்.

ஆஸ்கருக்குச் சென்ற கூழாங்கல்
தயாரிப்பாளராக கூழாங்கல், நெற்றிக்கண் ஆகிய படங்களை விக்னேஷ் தயாரித்துள்ளார். கூழாங்கல் ஆஸ்கர் விருதுக்காக சென்றது. இளம் இயக்குநராக வளர்ந்துவரும் விக்னேஷ் சிவனும் நயன் தாராவும் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வருகின்றனர். அவர்கள் திருமணம் குறித்து அறிந்துக்கொள்ள ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். 2022 ஆம் ஆண்டில் அவர்கள் திருமணம் நடக்கலாம் என்று எதிர்ப்பார்க்கின்றனர்.

இருமுடியுடன் சாமி தரிசனம்
இந்நிலையில் இன்று காலை இருமுடியுடன் சுவாமி தரிசனம் செய்யும் படங்களையும் காணொளியையும் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார். மாலை போட்டு விரதம் இருந்து பக்தியுடன் சபரிமலைக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.அதில் இருமுடியுடன் சபரிமலையில் காத்துக்கொண்டிருக்கும் காட்சிகள் உள்ளன. பிரபலம் என்ற ஈகோ இல்லாமல் பொதுமக்களுடன் வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்யும் காட்சிகளும் உள்ளது.

தந்தைக்காகவும் சபரிமலைக்கு வருகிறேன்
தனது சபரிமலை பக்தி பயணம் குறித்து பேட்டி அளித்துள்ள விக்னேஷ் சிவன், "ஆண்டுக்கு 2, 3 முறை சபரிமலைக்கு வர முயற்சி எடுப்பேன். 2019 ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் இங்கு வந்தேன். அதன்பின்னர் கொரோனா ஆரம்பித்ததால் வரவில்லை. சிறு வயதிலேயே எனது அப்பாவுடன் சபரி மலைக்கு வருவேன். இப்போது அப்பா இல்லை. அவருக்காகவும் சேர்த்து தனியாக வருகிறேன்.

மகரஜோதியை காண ஆசை
சபரிமலைக்கு பக்தர்கள் வரும் விதம், அவர்களை சாந்தப்படுத்தி விடும். பக்தி என்பது எல்லாருக்கும் இருக்கிறது. நான் சபரிமலை ஐயப்பனை விரும்பி வணங்குவேன். செருப்பு அணியாமல் விரதமிருந்து நடந்து வந்து சுவாமி தரிசனம் செய்வது உடலில் புத்துணர்ச்சியை நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. ஜோதி தரிசனத்திற்காக வந்துள்ளேன். 2019-ல் பார்த்தோம். அதன்பின்னர், கொரோனாவால் 2 ஆண்டுகள் பார்க்க முடியவில்லை. திரும்பவும் கோயில் திறக்கப்பட்டுள்ளதால் ஜோதி தரிசனத்தை பார்ப்பதற்கு ஆவலாக உள்ளேன்". எனத் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











