ரித்திக்கின் இந்த உருட்டல் மிரட்டலுக்கு எல்லாம் பயப்பட மாட்டேன்: நடிகை கங்கனா ரனாவத்
மும்பை: மிரட்டலுக்கு எல்லாம் பயப்படுபவள் நான் அல்ல என்று நடிகர் ரித்திக் ரோஷனை கைது செய்யக் கோரி போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ள பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.
காதலர்களாக இருந்து பிரிந்துவிட்ட பாலிவுட் நட்சத்திரங்கள் ரித்திக் ரோஷனும், கங்கனா ரனாவத்தும் தற்போது எதிரிகளாகிவிட்டனர். கங்கனா தன்னை பற்றி அவதூறாக பேசியதாகக் கூறி ரித்திக் கங்கனாவுக்கு வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பினார்.
மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது என்று கூறி பதிலுக்கு கங்கனா அவருக்கு நோட்டீஸ் அனுப்ப பிரச்சனை பெரிதாகிவிட்டது.

புகார்
ரித்திக் ரோஷன் தனது பெயரைக் கெடுக்க தான் அவருக்கு அனுப்பிய இமெயில்கள், புகைப்படங்களை வெளியிட்டதாக கங்கனா தெரிவித்துள்ளார். மேலும் தனது பெயரைக் கெடுத்த ரித்திக் ரோஷனை கைது செய்யக் கோரி அவர் மும்பை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.

பயம்
ரித்திக்கும், அவரது வழக்கறிஞர் குழுவும் என் தனிப்பட்ட இமெயில்கள், புகைப்படங்களை வெளியிட்டு என் பெயரைக் கெடுக்கிறார்கள். மிரட்டலுக்கு எல்லாம் பயப்படுபவள் நான் அல்ல. இந்த மிரட்டல் வேலை எல்லாம் என்னிடம் வேண்டாம் என்கிறார் கங்கனா.

நடக்காது
என்னை மிரட்டுபவர்களுக்கு எதிராக என் சட்டக் குழு நடவடிக்கை எடுத்து வருகிறது. நான் எழுதிய காதல் கவிதைகள், கடிதங்கள், அனுப்பிய புகைப்படங்களை வெளியிடுவதால் நான் பயந்து போய் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று தில்லாக கங்கனா தெரிவித்துள்ளார்.

வெட்கப்படவில்லை
நான் எதை நினைத்தும் வெட்கப்படவில்லை. என்னுடைய கடந்த காலம், தொடர்புகள், என் உடல் என எதைப் பற்றியும் வெட்கப்படவில்லை. அதனால் நான் கீழ்த்தரமானவள் என்று அவதூறு பரப்புவதை நினைத்து கவலை இல்லை என்று கங்கனா கூறியுள்ளார்.

மன்னிப்பு
பெயரைக் கெடுத்ததாக நோட்டீஸ் அனுப்பி என்னை மன்னிப்பு கேட்குமாறு கூறுபவருக்கு ஒன்றை தெரிவித்துக் கொள்கிறேன். நான் அவரை அவதூறாகப் பேசியதை நிரூபித்தால் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறேன் என்கிறார் கங்கனா. கங்கனா பேட்டி ஒன்றின்போது சில்லறைத்தனமான முன்னாள் காதலர் என்று கூற ரித்திக் கடுப்பாகி நோட்டீஸ் அனுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











