நானா.. நடிகனா.. இப்பக் கூட என்னால நம்ப முடியலை.. இதுதாங்க ஷாருக் கானின் சக்ஸஸ் பார்முலா!
சென்னை: நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. ஏன் என்றால் மக்கள் என்னை ஏற்றுக் கொண்டனர். என் மீது அளவு கடந்த அன்பு செலுத்தினர். இன்றளவும் நான் நடிகனாகி விட்டேன் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. சில சமயங்களில் நான் நடிகனாக நடந்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இருப்பினும் இந்த நடிப்பு பணியை நான் மிகவும் நேசிக்கிறேன் என்றார் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான்.
இன்று நாம் ஒருவரை பிரபலம் என்று போற்றுகிறோம் என்றால், அதில் பெரும்பாலானவர்கள் நிச்சயம் ஒரு கரடுமுரடான பாதையை கடந்து தான், இந்த ஒரு நிலைக்கு வந்திருப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு செலிப்ரிட்டி, பாலிவுட்டின் அசைக்க முடியாத ஒரு முன்னணி கதாநாயகன் ஷாருக் கான்.

அவர் ஆரம்ப காலங்களில் பல கஷ்டங்கள், இழப்பு என பல இன்னல்களை கடந்து தான் இந்த நிலைமைக்கு வந்துள்ளார். சினிமாவில் நடிப்பதற்காக மும்பை வந்த ஷாருக் கான், சீரியல், விளம்பரம் என்று ஆரம்பித்த அவரது பயணம் 1992ஆம் ஆண்டு திவானா என்ற திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இப்படி ஆரம்பித்த பயணம் அவரது விடா முயற்சியாலும், தன்னம்பிக்கையாலும், திறமையாலும் அவரை வெற்றியின் உச்சிக்கு கொண்டு சென்றது.
ஷாருக் கான் ஒரு முறை தனது திரையுலக வாழ்க்கை பற்றி ஒரு நிகழ்ச்சியில் தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்தார். அப்போது அவர் கூறுகையில், நானா படேகர், ஜூஹி சாவ்லா, அம்ரிதா சிங் முன்பு ஒரு முறை நடித்து காட்டியபோது நன் மிகவும் பதட்டம் அடைந்தேன்.
நீங்கள் ஒரு காட்சியில் நடித்து முடித்த பிறகு, அதை பார்க்கும் போது உங்களுக்கு அதில் உள்ள நெகடிவ் மட்டுமே தென்படும். அப்போது வெறும் எதிர்மறை எண்ணங்கள் மட்டுமே மனதிற்குள் ஓடும். அப்படி நான் படத்தில் நடித்த காட்சிகளை பார்த்த பிறகு நிச்சயம் என்னால் நடிகனாக முடியாது என்ற எண்ணம் மனதிற்குள் ஒலித்தது.

படத்தின் இயக்குநர் என்னை சமாதானப்படுத்த முயற்சித்தாலும் என்னால் அதில் இருந்து வெளியேற முடியவில்லை. இறுதி வடிவம் கிடைத்த பிறகு, படம் நன்றாக இருக்கும் என்று கூறினார் இயக்குநர்.
அஜய் பிஜிலி படத்தினை பார்த்த பிறகு, நிச்சயம் இப்படம் திரையரங்கில் மாபெரும் வரவேற்பை பெரும் என்று கூறினார். அவர்கள் கூறியதை என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை. ஏனெனில் நான் மிகவும் சாதாரணமாக தான் இருந்தேன். ஆனால் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. ஏன் என்றால் மக்கள் என்னை ஏற்றுக் கொண்டனர். என் மீது அளவு கடந்த அன்பு செலுத்தினர்.

இன்றளவும் நான் நடிகனாகி விட்டேன் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. சில சமயங்களில் நான் நடிகனாக நடந்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இருப்பினும் இந்த நடிப்பு பணியை நான் மிகவும் நேசிக்கிறேன் என்றார் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான்.
எனவே உச்சியின் விளிம்பில் உட்காருவது அவ்வளவு எளிதல்ல. அதற்கு கடுமையான அர்ப்பணிப்பு நிச்சயம் தேவை என்பதற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு ஷாருக் கான்.


Click it and Unblock the Notifications











