சல்மான் ஓகே என்றால் நாளையே அவருடன் இணைந்து நடிக்கத் தயார்!- ரஜினி
சல்மான் கான் ஓகே சொன்னால் நாளையே அவருடன் நான் இணைந்து நடிக்கத் தயார் என்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
மும்பையில் நேற்று நடந்த 2.0 முதல் தோற்ற விழாவில் அழையா விருந்தாளியாக பங்கேற்றார் பாலிவுட்டின் வசூல் மன்னர்களில் ஒருவரான சல்மான் கான்.

சூப்பர் ஸ்டார் ரஜினி மீது தான் மிகுந்த மரியாதை வைத்திருப்பதாகவும், அவரைக் காண வேண்டும் என்பதற்காகவே தான் அழைப்பு இல்லாவிட்டாலும் வந்ததாகக் குறிப்பிட்டார்.
மேலும் அவர் கூறுகையில், "ஒரு முறை நானும் ரஜினி சாரும் ஒரு ஷூட்டிங்கில் இருந்தோம். அப்போது பாத்ரூமில் ரஜினி சார், சிகரெட்டைத் தூக்கிப் போட்டு பிராக்டீஸ் பண்ணிக் கொண்டிருந்தார். ஏன் இங்கே செய்கிறீர்கள்? என்று நான் கேட்டதற்கு, வெளியே காற்று பலமாக அடிப்பதால், இங்கே பிராக்டீஸ் செய்கிறேன் என்றார். அது திறந்த வெளியில் நடந்த ஒரு நிகழ்ச்சி. உண்மையிலேயே ரஜினி ஒரே ஷாட்டில் சிகரெட்டை பிடிக்கிறாரா எனப் பார்க்க பின் பக்கம் சென்று எட்டிப் பார்த்தேன். யெஸ்.. அவர் ஒரே ஷாட்டில் சிகரெட்டைத் தூக்கிப் போட்டுப் பிடித்தார்," என நினைவு கூர்ந்தார்.

அடுத்து ரஜினியிடம் ஒரு கேள்வியை முன் வைத்தனர் செய்தியாளர்கள்.
'அக்ஷய் குமாருடன் இணைந்து நடித்த நீங்கள், எப்போது சல்மான் கானுடன் சேர்ந்து நடிக்கப் போகிறீர்கள்?'
இதற்கு பதிலளிக்கும்போது, நிகழ்ச்சிக்கு வந்ததற்காக சல்மான் கானுக்கு நன்றி கூறிய ரஜினி, "சல்மான் கான் ஓகே சொன்னால் நாளையே கூட அவருடன் சேர்ந்து நடிக்க நான் தயார்," என்றார்.
ரஜினியின் இந்த பதிலைக் கேட்டு கண் கலங்க சிரித்தார் சல்மான் கான்.


Click it and Unblock the Notifications











