பாக்ஸ் ஆபீசை கலக்கிவரும் 'ஐ' திரைப்படம்! ஹிந்தியில் இன்று ரிலீஸ்
சென்னை: ஷங்கரின் ஐ திரைப்படம் பாக்ஸ் ஆபீசில் வசூல் வேட்டை நடத்திவருகிறது.
ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், ஏமி ஜாக்ஷன் நடிப்பில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியாகியுள்ள பிரமாண்ட திரைப்படம் ஐ. தமிழகத்தில் திரையிட்ட முதல் நாளில் ஐ திரைப்படம் ரூ.10.5 கோடி அளவுக்கு வசூலித்துள்ளது. கேரளாவில் அம்மாநில வரலாற்றிலேயே முதல் முறையாக 3.05 கோடியை இத்திரைப்படம் வசூலித்துள்ளது. அம்மாநிலத்தில் 225 திரையரங்குகளில் வெளியான ஐ, முன் எப்போதும் இல்லாத முதல் நாள் வசூலை ஒரு திரைப்படத்திற்கு ஈட்டித் தந்துள்ளது.

அதேபோல அண்டை மாநிலமான கர்நாடகாவில் 2 கோடி வசூலாகியுள்ளது. அமெரிக்காவில் சுமார் 3 லட்சம் டாலர் மதிப்புக்கு வசூல் வேட்டை நடத்தியுள்ளது ஐ. இவையெல்லாம் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து வெளிவராத, பிற வட்டார தகவல்கள் மூலம் சேகரித்த வசூல் நிலவரமாகும்.
எதிர்பார்ப்பு காரணமாக ஐ படத்தை ரசிகர்கள் போட்டி போட்டு பார்த்ததால் கிடைத்த முதல்நாள் வசூல்தான் இது. படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தால் இதே வசூல் வேட்டை தொடரும், அல்லது படத்தின் பட்ஜெட்டை, வசூல் எட்டிப்பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுவிடும். அஜித்தின் என்னை அறிந்தால் திரைப்படம் வரும் 29ம்தேதிதான் வெளியாகிறது. அதுவரை பெரிய படங்கள் எதுவும் வெளியாகப்போவதில்லை என்பதால் ஐ தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் போட்ட முதலுக்கு மோசம் ஏற்பட்டுவிடாது என்று சினிமா பார்வையாளர்கள் கணிக்கின்றனர். இதனிடையே ஹிந்தியில் இன்று ஐ திரைப்படம் ரிலீசாக உள்ளது.


Click it and Unblock the Notifications











