ரஜினிக்கு ஏற்ற கதைக்காக காத்திருக்கிறேன்...! - எஸ்எஸ் ராஜமௌலி
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இயக்கும் ஆசை இன்றைல்ல.. பல ஆண்டுகளாக எனக்கு உண்டு. ஆனால் நல்ல கதைக்காகக் காத்திருக்கிறேன் என்று இயக்குநர் எஸ்எஸ் ராஜமௌலி கூறியுள்ளார்.
மகதீரா வெளியானதிலிருந்தே ரஜினி - ராஜமௌலி கூட்டணி பற்றி பேச்சு கிளம்பிவிட்டது. இப்போது பாகுபலி உலகையே அதிர வைத்துக் கொண்டுள்ள நிலையில், ரஜினியை ராஜமௌலி எப்போது இயக்கப் போகிறார் என்று கேட்க ஆரம்பித்துள்ளனர்.
ஏற்கெனவே பல மேடைகளில் ரஜினியை இயக்கும் தன் ஆசையை ராஜமௌலியும், அவர் இயக்கத்தில் நடிக்க எப்போதும் தயார் என ரஜினியும் கூறிவிட்டனர்.

இந்த நிலையில் நேற்று மீண்டும் அப்படி ஒரு கேள்வியை ராஜமௌலியிடம் வைத்தனர். அதற்கு பதிலளித்த அவர், "ரஜினியை வைத்து படம் பண்ணும் ஆசை முன்பை விட இப்போது அதிகமாகவே உள்ளது. ஆனால் அது சாதாரண விஷயம் கிடையாது. ரஜினி மிகப் பெரிய சூப்பர் ஸ்டார். அதை மனதில் வைத்து படத்தை உருவாக்க வேண்டும். அவருக்கேற்ற கதை அமைவது மிகவும் கடினம்.
அந்த மாதிரி ஒரு கதை எனக்கு அமைந்தால் என்னைவிட இந்த உலகத்தில் பெரிய மகிழ்ச்சியான ஆள் இருக்கவே முடியாது. ரஜினிக்கேற்றவாறு கதை அமைந்தால் கண்டிப்பாக அவரை வைத்து படம் இயக்குவேன்," என்றார்.


Click it and Unblock the Notifications











