இந்தி, தெலுங்கு உள்ளிட்ட 11 மொழிகளில் 'அப்பா'வை ரீமேக் செய்திட விருப்பம்- சமுத்திரக்கனி
சென்னை: தமிழ் தவிர மேலும் 11 மொழிகளில் அப்பா படத்தை ரீமேக் செய்திட விரும்புகிறேன் என்று நடிகரும், இயக்குநருமான சமுத்திரக்கனி தெரிவித்திருக்கிறார்.
சமுத்திரக்கனி இயக்கி, தயாரித்து அவரே நடிக்கவும் செய்திருக்கும் படம் அப்பா. ஜூலை 1 ம் தேதி 250 க்கும் அதிகமான திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது.
இந்நிலையில் இப்படத்தின் கதையை இந்தியாவின் மூலை, முடுக்குகளிலும் கொண்டு செல்லப் போவதாக சமுத்திரக்கனி தெரிவித்திருக்கிறார்.

கன்னடம்
இதுகுறித்து அவர் '' அப்பா படத்தின் கன்னட ரீமேக்கில் நடிக்க நடிகர் சிவராஜ்குமாரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன். இதேபோல இயக்குநர் பிரியதர்ஷனும் விரைவில் இப்படத்தை பார்க்கவிருக்கிறார்.அவருக்கு இப்படம் பிடித்திருந்தால் இதன் இந்தி ரீமேக்கை தயாரிப்பார்.தெலுங்கில் வெங்கடேஷ், நாகர்ஜுனா இருவரில் ஒருவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன்.

சாட்டை
சாட்டை படத்தில் நடிக்கும்போதே இப்படத்தை இயக்குமாறு அன்பழகனிடம் கூறி, அதற்கு ஒரு தொகையையும் அட்வான்ஸாகக் கொடுத்தேன். ஆனால் எதிர்பாராதவிதமாக இப்படத்திற்கு முன் அவர் பிரபு சாலமன் படத்திற்கு சென்றுவிட்டார். அதனால் அப்பாவை நானே இயக்கி, தயாரிக்க முடிவு செய்தேன். இதனை அன்புவிடம் கூறியபோது அவர் மிகவும் சந்தோஷப்பட்டார்.

34 நாட்கள்
கடுமையான சூழ்நிலைகளுக்கு இடையில் இப்படத்தை வெறும் 34 நாட்களில் எடுத்து முடித்து விட்டேன். 3 அப்பா, 3 மகன்களுக்கு இடையேயான கதைதான் இந்த அப்பா. நம் சமூகத்தைப் பொறுத்தவரை குறை என்பது குழந்தைகளிடம் இல்லை. நமது கல்வி முறையிலும், அப்பாக்களின் வளர்ப்பிலும் தான் இருக்கிறது.

தற்கொலை
கல்வியால் நடைபெறும் தற்கொலைகளில் தமிழ்நாடுதான் முதலிடத்தில் இருக்கிறது. ஒரு மாணவியின் தற்கொலையால் இந்த விவரங்களை சேகரிக்க சொன்னேன். அதன்படி சுமார் 4 வருடங்களாக பேப்பர்களில் வரும் தகவல்களை சேகரித்து அதிலிருந்து இந்தப்படத்தின் திரைக்கதையை உருவாக்கியிருக்கிறேன்'' என்றார்.
ஜூலை 1 ம் தேதி வெளியாகும் 'பைசா', 'மெல்லிய கோடு', 'ஜாக்சன் துரை' ஆகிய படங்களுடன் சமுத்திரக்கனியின் 'அப்பா' மோதுவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











