ஆன்மீக நிகழ்ச்சிகளுக்கு ரஜினியை அழைத்து வருவேன்! - கங்கை அமரன்
ஆன்மீக நிகழ்ச்சிகளில் பங்கேற்க ரஜினிகாந்தை நான் அழைத்து வருவேன் எனத் தெரிவித்தார் கங்கை அமரன்.
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இந்து முன்னணி சார்பில் நிறைவு விழா பொதுக்கூட்டம் திருப்பூரில் நடந்தது.

இந்த விழாவில் இசையமைப்பாளரும் இயக்குநருமான கங்கை அமரன் கலந்து கொண்டு பேசினார்.
அவர் கூறுகையில், "டாஸ்மாக் மதுக்கடைக்கும், மது அருந்துபவர்களுக்கும் பாதுகாப்பாக நிற்க வேண்டியுள்ளதே என மனம் நொந்த போலீசாருக்கு இப்போது விமோசனம் கிடைத்துவிட்டது. பெற்ற தாயும், தந்தையுமே உலகம் என உணர்த்திய விநாயகருக்கு பாதுகாப்பில் ஈடுபட்டதால், அந்த பாவம் போய் விட்டது.
திராவிடம் பேசுபவர்களின் குடும்பத்தினர் கோவிலுக்கு சென்று சாமியை வழிபடுகிறார்கள். திராவிடத்தை சேர்ந்தவர்கள் கடவுள் நம்பிக்கை குறித்து தெளிவாக அறிவிக்க வேண்டும்.
இதுபோன்ற ஆன்மிக நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டும் என்று என்னிடம் நடிகர் ரஜினிகாந்த் கூறுவார். இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு அவரையும் அழைத்து வருவேன்," என்றார்.
கங்கை அமரன் சில மாதங்களுக்கு முன்புதான் பாஜகவில் இணைந்தார் என்பது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications











