"அஜீத்" நடிப்பில் "பாட்ஷா" மாதிரி ஒரு படம் பண்ண ஆசை - சுரேஷ் கிருஷ்ணா
சென்னை: அஜீத்தை வைத்து பாட்ஷா போன்ற ஒரு படத்தை எடுக்க ஆசைப்படுவதாக இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா, சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார்.
பாட்ஷா படத்தின் 2 வது பாகத்தை எடுக்கப் போகிறார் இல்லையில்லை அஜீத்தை வைத்து பாட்ஷா படத்தை ரீமேக்கப் போகிறார் என்று பல்வேறு செய்திகள் வெளியான நிலையில், அவற்றில் துளியும் உண்மையில்லை என்று மறுத்திருக்கிறார் சுரேஷ் கிருஷ்ணா.
நடிகர் ரஜினி சமீபத்தில் ஒரு மேடையில் பேசும்போது பாட்ஷா மாதிரி ஒரு படத்தை எப்போதும் எடுக்க முடியாது என்று கூறியிருந்தார். இந்நிலையில் பாட்ஷா இயக்குநர் அஜீத்தை வைத்து "பாட்ஷா" மாதிரி படமெடுக்க தற்போது ஆசைப்பட்டிருக்கிறார்.

பாட்ஷா
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் கடந்த 1995-ம் ஆண்டு வெளிவந்த படம் ‘பாட்ஷா', இந்தப் படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். நக்மா, ரகுவரன், ஜனகராஜ், விஜயகுமார், டெல்லி கணேஷ் ஆகியோர் முக்கியமான வேடங்களில் நடித்திருந்தனர்.

படத்தின் கதை
தன் நண்பனைக் கொன்றவர்களை பழிவாங்கும் ரஜினி பின்னாட்களில் மும்பையில் மிகப்பெரிய தாதாவாக உருவெடுப்பார். தன் தந்தையின் வாக்கைக் காப்பாற்ற மும்பையில் இருந்து சென்னைக்கு வந்து சாதாரண ஆட்டோக்காரனாக மாறி, தனது குடும்பத்திற்காக பாடுபடுவார். படத்தில் தாதா மற்றும் ஆட்டோக்காரன் என 2 வேடங்களிலும் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களைக் கவர்ந்திருந்தார் ரஜினி.

25 கோடி
சுமார் 25 கோடியில் எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் 75 கோடிகள் வரை வசூலித்து பாக்ஸ் ஆபிசில் மாபெரும் சாதனையை நிகழ்த்தியது.

பாட்ஷா சான்சே இல்ல
இந்த படத்தை பற்றி சமீபத்தில் ஒரு மேடையில் பேசிய ரஜினி, ‘பாட்ஷா' படத்தை போன்று இன்னொரு படம் எப்போதும் எடுக்க முடியாது என்று கூறியிருந்தார்.

ரஜினியின் பேச்சால்
ரஜினியின் பேச்சை கேள்விப்பட்ட இப்படத்தின் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளார். அவர் கூறும்போது, நான் இயக்கிய படத்தை பற்றி ரஜினியும், மற்றவர்களும் இன்னமும் பேசி வருவது எனக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. அவர் கூறுவதுபோல், உண்மையிலேயே ‘பாட்ஷா' படம் போன்று இன்னொரு படம் எடுக்க முடியாது. இந்த படத்தை அந்தளவுக்கு நாங்கள் அணுஅணுவாக ரசித்து எடுத்திருந்தோம். அதனால்தான் மக்கள் மனதில் இன்றும் இப்படம் நிலைத்து நிற்கிறது.

பாட்ஷா அல்ல பாட்ஷா மாதிரி
அஜித்தை வைத்து பாட்ஷா படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கப்போவதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஆனால், இதுவரை நான் அஜித்தை சந்தித்து இதுகுறித்து பேசியது கிடையாது. அஜித் ஒரு பெரிய சூப்பர் ஸ்டார். அவரை வைத்து பாட்ஷா மாதிரியான ஒரு படம் பண்ண வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அது அமைந்தால் கண்டிப்பாக அவருக்காக கதை அமைத்து படம் இயக்குவேன் என்று கூறினார்.


Click it and Unblock the Notifications











