இசை வெளியீட்டுக்கு முன்னே வெளியான பாடல்கள்… எளிமையாக நடந்த இடம் பொருள் ஏவல்
சென்னை: நீர்ப்பறவை' படத்திற்குப்பின் சீனுராமசாமி இயக்கியுள்ள படம் தான் ‘இடம் பொருள் ஏவல்'. தான் எழுதிய பாடல் மூலம் தேசியவிருதுபெற்று, அதன்மூலம் சீனு ராமசாமிக்கு கௌரவம் சேர்த்த கவிஞர் வைரமுத்து தான் இந்தப்படத்திலும் பாடல்களை எழுதியிருக்கிறார்.
ஆச்சர்யமாக இந்தப்படத்தில் முதன்முறையாக யுவன் ஷங்கர் ராஜாவுடன் கூட்டணி சேர்ந்திருக்கிறார். சில தினங்களுக்கு முன் இந்தப்படத்தின் பாடல்கள் இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியானது. அதனாலேயே மிக பிரமாண்டமாக நடத்தலாம் என்று முதலில் தீர்மானிக்கப்பட்ட இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சூரியன் எப்.எம்மில் படக்குழுவினர் முன்னிலையில் மிகவும் எளிதாக நடைபெற்றது.
இந்த விழாவில் படத்தயாரிப்பாளர் என்கிற முறையில் இயக்குனர் லிங்குசாமி கலந்துகொண்டார். வைரமுத்து, சீனு ராமசாமி, கதாநாயகர்கள் விஜய்சேதுபதி, விஷ்ணு, கதாநாயகிகள் ஐஸ்வர்யா, நந்திதா ஆகியோர் கலந்துகொண்டு இசைத்தகட்டினை வெளியிட்டனர்.
சினிமாவில் இது போன்று நடந்தால் எப்படி இருக்கும் என்று நினைப்பவர்களுக்காகவே யுவன் -வைரமுத்து முதன் முறையாக இணைந்திருக்கும் படம் தான் இடம் பொருள் ஏவல்.
இத்தனை நாளா எங்க போனீங்க யுவன் என்று எல்லோரும் தேடிய நிலையில் அனைவரும் எதிர்ப்பார்த்தது இந்த யுவனை தான். இடம் பொருள் ஏவலில் அப்படி ஒரு கிராமிய இன்னிசை ஆல்பத்தை கொடுத்திருக்கிறார்.

வையம்பட்டி....
படத்தின் மொத்த கதையையும் இந்த ஒரே பாடலில் கூறியிருக்கிறார் வைரமுத்து. மலைக்கு போய் மொட்டை போடுகிறீர்கள், ஏன் மலைக்கே வந்து மொட்டை அடிக்கிறீர்கள் போன்ற வரிகள் காடுகளை அழிக்க நினைப்பவர்களுக்கு நெத்தியடி. இதற்கு மிக யதார்த்தமாக பொருந்தியிருக்கிறது ஆண்டனிதாசன், ப்ரியதர்ஷினி குரல்கள்.

ஈரக்காத்தே
ஈரக்காத்து அடித்தால் எத்தனை சுகமாக இருக்குமோ அத்தனை சுகமாக இருக்கிறது அனிதாவில் குரலில் இந்த பாடல் வருகையில். யுவனிடம் பலரும் எதிர்ப்பார்ப்பது மெலடி பாடல்களை தான். அதற்காகவே ஸ்பெஷலாக வந்துள்ளது ஈரக்காத்து.

குருந்தொகை
யுவன் காதல் பாடல்களுக்கு என்றுமே ஸ்பெஷல் தான். அந்த வகையில் வழக்கம் போல் புகுந்து விளையாடியுள்ளார் மனுஷன். இந்த பாடலை வி.வி.பிரசன்னா, சோனியா பாடியுள்ளனர். மிகவும் ரம்மியமான பாடல் இது.

எந்த வழி
எல்லோரும் பாடலாம் ஆனால், ஒரு சிலர் பாடினால் தான் அந்த பாடலுக்கு ஒரு வகையான உயிர் கிடைக்கும். வைக்கம் விஜயலட்சுமியின் குரல் இன்னும் பல ஆண்டுகள் திரையுலகில் ஒலிப்பதற்கு இந்த பாடல் ஒன்றே சான்று. தொலைத்த பயணத்தை தேடி செல்வது போல் வரும் இந்த பாடலின் வரிகளை கேட்கையில் வைரமுத்துவின் இத்தனை ஆண்டு அனுபவம் அழகாக தெரிகிறது.

கொண்டாட்டமே
ஆனந்த யாழை பாடலுக்கு பிறகு யுவனுக்காக ஸ்ரீராம் பார்த்தசாரதி பாடிய பாடல். இப்பாடலில் யானை பலம் வைரமுத்து வரிகளையே சாரும். வியர்வைகள் எல்லாம் வெற்றி பெறுவதில்லை, வியர்வை இன்றி வெற்றிகள் இல்லை போன்ற வரிகள் வாழ்க்கையில் துவண்டு இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு பூஸ்ட் வகையான பாடல்.

அத்துவான காட்டுக்கு
யுவனின் இசையில் அவர் பாடியிருக்கிறாரா என்று தேடுவோம், அந்த ரசிகர்களுக்காக தன் ஈரக்குரலால் தாலாட்டியிருக்கிறார். அதற்கு வைரமுத்துவின் வைர வரிகள் மனதை பிசைகிறது. கண்டிப்பாக யுவன் குரலில் வந்த பாடல்களின் இந்த அத்துவான காடுதான் ஸ்பெஷல்.

யுவனின் மகுடம்
யுவனின் மாஸ்டர் பீஸ்களான 7ஜி, கற்றது தமிழ், காதல் கொண்டேன், புதுப்பேட்டை போன்ற படங்களின் வரிசையில் கண்டிப்பாக இந்த இடம் பொருள் ஏவலும் இடம்பெறும். மொத்தத்தில் யுவனின் மகுடத்தில் மற்றுமொரு வைரக்கல்.


Click it and Unblock the Notifications











