இடம் பொருள் ஏவல்… அக்டோபரில் ரிலீஸ் அறிவித்த சீனு ராமசாமி
இடம் பொருள் ஏவல் திரைப்படத்தினை அக்டோபர் மாதத்தில் பெரிய திரையில் காணலாம் என்று அறிவித்துள்ளார் அப்படத்தின் இயக்குநர் சீனு ராமசாமி.
திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் இடம் பொருள் ஏவல். தேசிய விருது பெற்ற இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, விஷ்ணு, நந்திதா, ஐஸ்வர்யா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் முதல் முறையாக யுவன் சங்கர் ராஜாவும் வைரமுத்துவும் இணைந்து பணியாற்றியுள்ளனர்.
மதுரையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை கருவாக கொண்ட கதை. சீனு ராமசாமியின் நான்காவது படைப்பு இது. இந்தப் படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து விட்டாலும் ரிலீஸ் ஆக தயாராக உள்ளது.

5 லட்சத்திற்கும் மேல்
இடம் பொருள் ஏவல் படத்தின் டிரெயிலர் இதுவரை 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களை கடந்திருக்கிறது என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சீனு ராமசாமி.

மலையும் மலை அழகும்
மலை கிராமத்தின் அழகும்... திருப்பரங்குன்றம் மலையின் அழகும் டிரெயிலரிலேயே சும்மா அள்ளுகிறது கண்ணிற்குள்ளேயே நிற்கிறது. அதேபோல ஐஸ்வர்யா - விஷ்ணு காதல், நந்திதா - விஜய் சேதுபதியின் காதலும் ஏதோ நாம் பார்த்து பழகிய ஜோடி போலவே இயல்பானதாக இருக்கிறது.

மனதில் நிற்கும் வசனம்
"நம்ம கிட்ட இருக்கிற எல்லாமே போயி எதுவுமே இல்லாம தோத்துப்போயி நிக்கும் போது நம்ம கூட இருக்கிற பொம்பளதாண்ட கடைசி வரைக்கும் நம்ம கூட வருவா" என்ற வசனம் மனதில் பதிகிறது.
பணமா? காதலா?
குறுந்தொகை கொண்டாடும் காதல் மைந்தா
பெருந்தொகை எப்போது ஈட்டுவாய்
இன்பத்து பால் சொல்லும் இளைய வேந்தே
பொருட்பாலை எப்போது காட்டுவாய்
ஈசன் எழுதிய ஓலைகளில்
அக்கால காதல் உருவாகும்
ரேசன் எழுதிய அட்டைகளில்
தற்கால காதல் உருவாகும்
நல்ல வேலை செய்த பின்னே
சிறு தாலி செய்து கொண்டுவா
என்ற வைரமுத்துவின் வரிகளில் காதலுக்கு காசும் அவசியம் என்று இக்கால பெண்களின் மன ஓட்டத்தைப் பிரதிபலிக்கிறது.
அக்டோபரில் படம் ரிலீஸ்
இடம் பொருள் ஏவல் திரைப்படம் ரசிகர்களிடையே ஒருவித எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் வெள்ளித்திரையில் அக்டோபர் மாதம் வெளியாகும் என்று மகிழ்ச்சியுடன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சீனு ராமசாமி.


Click it and Unblock the Notifications











