வெளிநாடுகளிலும் வசூலைக் குவிக்கிறது சிம்புவின் இது நம்ம ஆளு!
சென்னை: சிம்பு-நயன்தாரா நடிப்பில் வெளியான இது நம்ம ஆளு திரைப்படம், வெளிநாடுகளில் இதுவரை 4.65 கோடிகளை வெளிநாடுகளில் குவித்திருக்கிறது.
சிம்புவின் நடிப்பில் 3 ஆண்டுகள் கழித்து வெளியானாலும் வசூலில் இப்படம் குறை வைக்கவில்லை என்று கூறுகின்றனர்.
மேலும் சிம்புவின் திரைப் பயணத்திலேயே இதுவரை இல்லாத அளவுக்கு இது நம்ம ஆளு படத்தின் ஓபனிங் வசூல் அமைந்துள்ளது.

சிம்பு-நயன்தாரா
சிம்பு-நயன்தாரா ஜோடி மீண்டும் சேர்ந்து நடிக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக இப்படத்தைப் பார்க்க ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தனர். இதற்கு ஏற்றவாறு இப்படத்தை வெளியிடப் போவதாக விளம்பரங்களை அடிக்கடி வெளியிட்டு படக்குழு ரசிகர்களின் புண்ணியத்தை கட்டிக் கொண்டது. ஒருவழியாக கடந்த மாதம் இப்படம் வெளியாகி சிம்பு ரசிகர்கள் வயிற்றில் பாலை வார்த்தது.

சூப்பர் ஓபனிங்
லேட்டாக வந்தாலும் கூட படத்தில் அந்தக் குறை தெரியாமல் இருக்க ட்ரெண்டுக்கு ஏற்றவாறு சில காட்சிகளை பாண்டிராஜ் அமைத்திருந்தார். படத்திற்கு கலவையான விமர்சனங்கள் எழுந்த போதும் சிம்பு-நயன் கெமிஸ்ட்ரி படத்தைக் காப்பாற்றி விட்டது. இதனால் 3 வருடங்கள் கழித்து வெளியான இப்படம் சிம்புவின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய ஓபனிங் கொடுத்த படமாக அமைந்திருக்கிறது.

வெளிநாடுகள்
வெளிநாடுகளில் இப்படம் சுமார் 4.65 கோடிகளை வசூலித்து சாதனை புரிந்துள்ளது. தமிழ்நாட்டிலும் இப்படம் 20 கோடிகளுக்கு மேல் வசூலித்துள்ளது. எனினும் அதிகாரப்பூர்வ வசூல் விவரங்களை படக்குழு இன்னும் வெளியிடவில்லை.

இறைவி
கடந்த வாரம் வெளியான இறைவி இந்தியா தவிர்த்து மற்ற நாடுகளில் சுமார் 1.44 கோடிகளை இதுவரை வசூல் செய்துள்ளது. இப்படத்தில் தயாரிப்பாளர்களை அவமதித்து விட்டதாக கார்த்திக் சுப்புராஜ் மேல் குற்றம் சாட்டி அவருக்கு ரெட் கார்டு போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











