‘இட்லி’யில் தோன்றும் மறைந்த நடிகை ‘குண்டு’ கல்பனா.. கிராபிக்ஸ் புண்ணியத்தால்!
சென்னை: நடிகை கல்பனாவின் மறைவால் பாதியில் நிறுத்தப்பட்ட இட்லி படத்தின் படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கியுள்ளது. இப்படத்தில் கிராபிக்ஸ் உதவியுடன் கல்பனா சம்பந்தப்பட்ட மீதிக் காட்சிகளைப் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
தமிழில் பாக்யராஜ் ஜோடியாக கடந்த 27 வருடங்களுக்கு முன்னர் சின்ன வீடு படத்தில் அறிமுகமானவர் நடிகை ஊர்வசியின் சகோதரி கல்பனா. அவரது பூசிய உடல்வாகால் அவரது பெயருக்கு முன்னே 'குண்டு' என்ற அடைமொழி ஒட்டிக் கொண்டது.

தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ள இவர், மலையாளத்தில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
திடீர் மரணம்...
கடந்த ஜனவரி மாதம் தெலுங்குப் பட ஹூட்டிங்கிற்காக ஹைதராபாத் சென்றிருந்த கல்பனா, ஹோட்டல் அறையில் மாரடைப்பால் மரணமடைந்தார். இதனால், அவர் நடித்துக் கொண்டிருந்த இட்லி என்ற படம் பாதியில் நிறுத்தப்பட்டது.
பாட்டிகள் கதை...
இப்படத்தில் கல்பனாவுடன் சரண்யா, கோவை சரளா உள்ளிட்டோரும் இணைந்து நடித்து வந்தனர். மூன்று பாட்டிகளைப் பற்றிய கதையான இப்படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராக கல்பனா நடித்து வந்தார்.
படக்குழு அதிர்ச்சி...
பாதிப்படம் படமாக்கப்பட்ட நிலையில் கல்பனாவின் மரணத்தால் படக்குழு அதிர்ச்சி அடைந்தது. படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்திய படக்குழு, கல்பனா சாயலில் உள்ள யாரையாவது தேர்ந்தெடுத்து மீதிப் படத்தை முடிக்கலாமா என ஆலோசித்து வந்தனர்.
கிராபிக்ஸ் உதவியுடன்...
ஆனால், அத்திட்டம் கைகூடாததால் கிராபிக்ஸ் உதவியுடன் கல்பனா சம்பந்தப்பட்ட மீதிக்காட்சிகளைப் படமாக்குவது என தற்போது முடிவு செய்துள்ளனராம். இதனால் மீண்டும் நேற்று இப்படத்தின் கிளைமாக்ஸ் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications











