ராதிகா நடித்தால், 10 நாட்களில் எடுக்க வேண்டியதை 5நாட்களில் முடிக்கலாம்...இயக்குநர் சற்குணம் புகழாரம்
சென்னை: நடிகர் அதர்வா நடிப்பில் வெளிவந்திருக்கும் பட்டத்து அரசன் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ஒரு படத்தில் குடும்ப பின்னணியை வைத்ததுதான் இந்தப் படத்தின் கூடுதல் சிறப்பு.
இந்நிலையில் இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள் பற்றி இயக்குநர் சற்குணம் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.

சற்குணம் படங்கள்
வழக்கமாக இயக்குநர் சற்குணத்தின் படங்களில் குறைவான கதாபாத்திரங்களே இருக்கும். ஆனால் பட்டத்து அரசன் படத்தில் ஒரு பட்டாளமே நடித்திருக்கிறார்கள். அதற்கு காரணம் என்ன என்று கேட்டபோது இந்தப் படத்தில் தாரப்பங்கு என்கிற விசயத்தை பற்றி பேசியிருக்கிறோம். அதனால் ஒரு நபருக்கு இரண்டு மனைவிகள், அவர்களுக்கு பெரிய குடும்பம் என்று ஒரு பட்டாளமே தேவைப்பட்டது. அதுமட்டுமின்றி அனுபவம் வாய்ந்த நடிகர்கள் நடிக்கும் பொழுது நமது வேலையை சுலபமாக்கி விடுவார்கள்.

கபடி பயிற்சி
மேலும் இதில் கபடி வீரர்களாக நடித்த நடிகர்களுக்கு படப்பிடிப்பிற்கு முன்னர் கபடி பயிற்சி கொடுக்கப்பட்டது. வழக்கமாக ஒரு கதையை உடனே ஒப்புக்கொள்ளாத ராஜ்கிரன் ஒரு படத்தை ஏற்றுக் கொண்டு நடித்தார் என்றால் அதற்காக முழு அர்ப்பணிப்போடு பணிபுரிவார். இந்தப் படத்தில் அவருக்கு 40, 50 மற்றும் 70 வயதில் உள்ள தோற்றங்களில் நடித்துள்ளார். மூன்று வயதிற்குமே வேறுபாடு காட்டி சிறப்பாக நடித்துள்ளார்.

கதாநாயகி
தமிழ் கலாச்சாரத்தை பற்றி படம் எடுத்துள்ளீர்கள். ஆனால், ஏன் தமிழ் கதாநாயகியை நடிக்க வைக்கவில்லை என்ற கேள்விக்கு, கதாநாயகி தேர்வு பொருத்தவரை ஆடிஷன் வைப்போம். அப்போது தமிழகத்திலிருந்து 5 ஆயிரம் பேர் விண்ணப்பித்தால் ஆந்திராவிலிருந்து 50,000 பேர் விண்ணப்பிப்பார்கள். அதைவிட கேரளத்திலிருந்து அதிகம் பேர் விண்ணப்பிப்பார்கள். தேர்வு செய்வதற்கு அதிக நபர்கள் இருப்பதால் வெளி மாநில கதாநாயகியை தேர்ந்தெடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது என்று சற்குணம் கூறி இருக்கிறார்.

ராதிகா
நடிகை ராதிகாவிற்கு இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. வழக்கமாக ராதிகா அவர்களை வைத்து 10 நாட்கள் படம்பிடிக்க வேண்டும் என்று நாங்கள் திட்டமிட்டிருந்தால் அவரது பகுதிகளை ஐந்தே நாட்களில் எடுத்து விடுவோம். காரணம், அவருடைய அர்ப்பணிப்பு! படப்பிடிப்பு தளத்திற்கு வந்தால் அடுத்து என்ன ஷாட் என்று ஆர்வமாக கேட்டுக் கொண்டே இருப்பார். செல்போனை அதிகம் பயன்படுத்த மாட்டார். அதற்காக மற்ற நடிகர்கள் பயன்படுத்துகிறார்கள் என்று சொல்லவில்லை அனைவருமே அர்ப்பணிப்போடு பணிபுரிந்தார்கள் என்றால், ராதிகாவின் அர்ப்பணிப்பு அவர்களை விட அதிகமாக இருந்தது என்று சற்குணம் பாராட்டி பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











