ரஜினியை வைத்து நான் படம் இயக்கினால் எப்படி இருக்கும் தெரியுமா?- எஸ்எஸ் ராஜமௌலி
ரஜினியை வைத்து நான் படம் இயக்கினால், முதல் பத்து நாட்களுக்கு வசனங்களைக் கேட்க முடியாத அளவுக்கு ரசிகர்களின் ஆரவாரம் இருக்கும் என்று இயக்குநர் எஸ்எஸ் ராஜமௌலி கூறினார்.
இந்தியாவில் மிகவும் கவனிக்கப்படும் இயக்குநராகிவிட்டார் எஸ்எஸ் ராஜமௌலி. பாகுபலியின் இமாலய வெற்றி, அவரை நிகரற்ற படைப்பாளியாக முன்னிறுத்தியுள்ளது.

இப்போது பாகுபலி இரண்டாம் பாகத்தை உருவாக்கி வரும் ராஜமௌலி, நேற்று முன்தினம் சென்னை ஐஐடி மாணவர்களைச் சந்தித்து உரையாடினார்.
அப்போது மாணவர்கள் கேட்ட கேள்விகளுள் ஒன்று, ரஜினியுடன் எப்போது இணைந்து படம் பண்ணுவீர்கள்? என்பது.
இதற்கு பதிலளித்த ராஜமௌலி, "இந்தக் கேள்வியை தென்னிந்தியாவில் உள்ள எந்த இயக்குநரிடம் கேட்டாலும் ஒரே பதிலைத்தான் சொல்வார்கள்" என்றார்.
நீங்கள் ரஜினியை இயக்கினால், அவருக்கு எந்த மாதிரி பாத்திரம் அமைப்பீர்கள்? என்று அடுத்த கேள்வியைக் கேட்டனர்.
அதற்கு பதிலளித்த ராஜமௌலி, "அதுபற்றி இப்போது ஒன்றும் சொல்ல முடியாது. ஆனால் ஒன்று மட்டும் உறுதியாகச் சொல்வேன். ரஜினியை வைத்து நான் படம் இயக்கினால், முதல் பத்து நாட்கள் அந்தப் படத்தில் எந்த வசனமும் காதில் விழாது. ரசிகர்களின் ஆரவாரம் அப்படி இருக்கும். அந்த ஆரவாரத்தை மட்டும்தான் படம் பார்ப்பவர்களால் கேட்க முடியும்," என்றார்.
அவரது இந்த பதிலுக்கு எழுந்த விசிலும் கைத்தட்டலும் அடங்க ரொம்ப நேரமானது!


Click it and Unblock the Notifications











