'வாழ்வில் மறக்க முடியாத நாள்...': இளையராஜாவிடம் ஆசி பெற்ற 'ருத்ரமாதேவி' அனுஷ்கா பரவசம்!
இசையமைப்பாளர் இளையராஜாவைச் சந்தித்து ஆசி பெற்றார் ருத்ரமாதேவி நாயகி அனுஷ்கா.
குணசேகர் தயாரிப்பு இயக்கத்தில் இளையராஜா இசையில் உருவாகி வரும் பிரமாண்டமான சரித்திப் படம் ருத்ரமாதேவி. இந்தப் படம் 3 டியில் தயாராகியுள்ளது.
சமீபத்தில்தான் இந்தப் படத்தின் பாடல்கள் ஆந்திராவில் வெளியாகின. விசாகப்பட்டணம் மற்றும் வராங்கல் நகர்களில் இரு வேறு விழாக்கள் மூலம் இசைத் தட்டு வெளியிடப்பட்டது.

லண்டனில் இசைச் சேர்ப்பு
இப்போது பின்னணி இசைச் சேர்ப்பு வேலைகள் நடக்கின்றன. படத்தின் ஜீவனே பின்னணி இசையில் இருப்பதால், லண்டனில் வைத்து இசைக் கோர்ப்புப் பணிகளைச் செய்கிறார் இளையராஜா.

அனுஷ்கா ஆசை
இதற்காக இன்று அவர் லண்டன் கிளம்புகிறார். அதற்கு முன் அவரைச் சந்தித்து ஆசி பெற விரும்பினார் நாயகி அனுஷ்கா. இளையராஜாவின் அதி தீவிர ரசிகை இவர். ராஜா லண்டன் கிளம்புவதற்குள் அவரைப் பார்க்க விரும்பிய அனுஷ்கா, நேற்று விமானத்தில் சென்னை வந்தார்.

ஆசி பெற்றார்
நேராக பிரசாத் ஸ்டுடியோவுக்குச் சென்றவர், அங்கு இளையராஜாவைச் சந்தித்து மலர்க் கொத்து அளித்தார். இளையராஜாவும் அவருக்கு வாழ்த்தும் ஆசியும் கூறினார்.
பின்னர் இளையராஜாவுடன் படங்கள் எடுத்துக் கொண்ட அனுஷ்கா, படத்தின் பாடல்கள் சிறப்பாக வந்திருப்பதாகக் கூறினார்.

மறக்க முடியாத நாள்
இளையராஜாவைச் சந்தித்தது குறித்து கூறிய அனுஷ்கா, "என் வாழ்நாளில் மறக்க முடியாத நாள் இது," என்றார்.
அப்போது இயக்குநர் குணசேகர், பாடலாசிரியர் பா விஜய், தயாரிப்பாளர் முரளி ராம நாராயணன் ஆகியோர் உடனிருந்தனர்.


Click it and Unblock the Notifications











