குளத்தை மூடி இன்னிசைக் கச்சேரியா? ... இயற்கையை நேசிக்கும் இசைஞானி இடத்தை மாற்றுவாரா
திருச்சி: இசைஞானி இளையராஜா திருச்சியில் இசை நிகழ்ச்சி நடைபெறும் இடம் பற்றி எழுந்துள்ள சர்ச்சைகளால், இசை கச்சேரி நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை மாற்றுவாரா அல்லது அதே இடத்திலேயே நடத்துவாரா என்ற கேள்வி இசை ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இசைஞானி இளையராஜாவின் கச்சேரி என்றால் கூட்டம் களை கட்டும். கல்லாவும் கட்டும். இதை புரிந்த பல தனியார் நிறுவனங்கள் அவருக்கு ஒரு கணிசமான தொகையை கொடுத்து பெரிய அளவில் நிகழ்ச்சிகள் நடத்த பல ஊர்களில் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் வரும் 25ம் தேதி திருச்சியில் நடைபெறவுள்ள இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என கோரி திருச்சியை சேர்ந்த மைக்கேல் என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில், திருச்சி விமான நிலையம் அருகே உள்ள தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் வரும் 25ஆம் தேதி இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அந்த நிகழ்ச்சியை நடத்தும் நிறுவனம் அங்குள்ள குளத்தை மண்போட்டு மூடிவிட்டு நிகழ்ச்சியை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

மூன்று மணி நேரம் மட்டுமே நடக்கும் இசை நிகழ்ச்சிக்காக காலம் காலமாக இருக்கும் குளத்தை மூடுவதா என்று பல பேர் பல விதமான கேள்விகள் எழுப்பி உள்ளனர். குளத்தை ஆக்கிரமித்து இசை நிகழ்ச்சி நடத்தும் இளையராஜாவிற்கு அனுமதி அளிக்கக்கூடாது, அதற்கு தடை விதிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஏரி குளங்களை மீட்க வேண்டும் என நீதிமன்றங்களும், அரசும் நடவடிக்கைகள் எடுத்துவரும் நிலையில், நன்றாக உள்ள குளத்தை மூடுவது சட்ட விரோத செயல் ஆகும். குளத்தை தூர்வாரி பராமரிக்கலாமே தவிற, இருக்கும் குளத்தை மண்ணிட்டு மூடிவதை ஏற்க முடியாது.

இளையராஜா போன்ற பிரபலங்கள் இதுபோன்ற செயல்களை அனுமதிக்கக்கூடாது, என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே அந்நிறுவனத்தின் மீது ஆக்கிரமிப்புகள் தொடர்பாக வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், இளையராஜா நிகழ்ச்சிக்காக மேலும் ஒரு குளத்தை ஆக்கிரமிப்பு செய்ததற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் திருச்சியில் நடைபெற இருந்த இசை நிகழ்ச்சியை தள்ளிப்போடுவதா, அல்லது வேறு இடத்தில் நடத்துவதா என்ற யோசனையில் இளையராஜா இருப்பதாக சொல்லப்படுகிறது. இசைஞானி இயற்கையை போற்றுபவர் என்பதால் கண்டிப்பாக நல்ல முடிவை எடுப்பார் என்ற நம்பிக்கை அனைவருக்கும் உள்ளது.


Click it and Unblock the Notifications











