என் மனைவியை 'புரு' என்றே அழைத்துவிட்டேன்.. மறைந்த 'டிரம்மர்' புருஷோத்தமன் பற்றி இளையராஜா உருக்கம்!
சென்னை: எங்கள் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டதை விட நானும் சமீபத்தில் மறைந்த புருஷோத்தமனும்தான் அதிக நேரம் ஒன்றாக இருந்திருக்கிறோம் என்று இளையராஜா தெரிவித்துள்ளார்.
பிரபல இசை அமைப்பாளர் இளையராஜாவின் இசைக்குழுவில் ஆரம்ப காலம் முதல் பணியாற்றி வந்தவர் புருஷோத்தமன்.
டிரம்மராகவும் கன்டக்டராகவும் பணியாற்றி வந்த இவர், இளையராஜாவின் முதல் படமான அன்னக்கிளியில் இருந்து பணியாற்றி வந்துள்ளார்.

வீடியோ பதிவு
'மடை திறந்து' பாடலில் திரையிலும் தோன்றியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் மரணமடைந்தார். அவரது மறைவு குறித்து இளையராஜா வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: என்னுடன் இருந்தவர்களில், என்னுடன் வேலை செய்து வந்த புருஷோத்தமன் இரண்டு, மூன்று நாட்களுக்கு முன் இயற்கை எய்திவிட்டார்.

இசையில் கழிந்த நேரம்
என் வாழ்நாளில், என் அருகில் அதிக நாள், அதிக நேரம், எங்கள் குடும்பத்தை விட, நாங்கள் இருந்த நேரம்தான் அதிகம். நேரம் என்றால், அதற்கு நேரம் என்று அர்த்தமல்ல. ஒவ்வொரு நாளும் எங்களுக்கு இசையிலேயே கழிந்த நேரம் அத்தனையுமே நாங்கள் ஒன்றாக இருந்த நேரம்தான். அதற்கு முன் அவரது சகோதரர் சந்திரசேகர், நான் இசை அமைக்கும் எல்லாவற்றையும் ரெக்கார்ட் செய்து, மொத்தமாக எனக்கு உதவியாக இருந்தவர்.

குடும்பத்துடன்
அவர்தான் முதலில் என்னுடன் அதிக நேரம் இருந்தவர். புருஷோத்தமன், எந்த நேரம் அழைத்தாலும் வந்துவிடுவார். என் வாழ்க்கையில் நான் என் குடும்பத்தாருடன் கூட அதிக நேரம் இருந்தது கிடையாது. ஒரு முறை என் மனைவியை கூட, புரு என்று அழைத்துவிட்டேன். அவ்வளவு நெருக்கமான புருஷோத்தமன் காலமானது வருத்தத்தை அளிக்கும் நிகழ்வு.

அனுதாபங்கள்
இதை இவ்வளவு சீக்கிரமாக எதிர்பார்க்கவில்லை. இறைவன் விரைவாகவே அவரை அழைத்துக் கொண்டுவிட்டான். அவரை இழந்துவாடும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். சேகர், கவுசிக், கல்யாணி, ராமன் அத்தனை பேருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கிறேன்.

நம்பிக்கை
எல்லாம் வல்ல இறைவன் தன் திருப்பதத்தை அவருக்கு அளித்து அவரை தன் காலடியில் சேர்த்து கொள்வார் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அந்த இறையருள் நம் எல்லோரையும் காக்குமாக. அவர் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். இவ்வாறு இளையராஜா தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











