எம்எஸ்விஸ்வநாதன் உருவப் படம்!- இளையராஜா திறந்து வைக்கிறார்
திரைப்பட இசை கலைஞர்கள் சங்க கலையரங்கில் அமரர் மெல்லிசை மன்னர் எம்எஸ் விஸ்வநாதன் உருவப் படத்தை இளையராஜா திறந்து வைக்கிறார். இசையமைப்பாளர்கள் சங்கம் இதனை இன்று அறிவித்துள்ளது.
இதுகுறித்து திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கம் விடுத்துள்ள அறிக்கை:
திரைப்பட இசை கலைஞர்கள் சார்பாக மறைந்த இசை மேதை மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களுக்கு நினைவஞ்சலி கூட்டம் நடத்துவதாக எங்களது திரைப்பட இசை கலைஞர்கள் மற்றும் அறக்கட்டளை சார்பாக முடிவு எடுக்கப்பட்டது.

வரும் ஆகஸ்ட் 02 ஆம் தேதி ஞாயிறு மாலை 6.00 மணிக்கு வடபழனி, என்எஸ்கே சாலையில் அமைந்துள்ள திரைப்பட இசை கலைஞர்கள் சங்க கலையரங்கத்தில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது.
எங்களது இந்த உணர்வு மிகு நிகழ்ச்சியில் இசை ஞானி இளையராஜா முன்னிலை வகித்து எம்.எஸ்.விஸ்வநாதனின் உருவப் படத்தை திறந்து வைத்து உரையாற்ற இருக்கிறார்.
எங்களின் அமைப்பைச் சேர்ந்த அனைத்து இசை அமைப்பாளர்களும், பிரபல பாடக, பாடகியரும், இசைக் கலைஞர்களும் இதில் பங்கேற்கிறார்கள். மேலும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம், தமிழ்த்திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் நிர்வாகிகளும், மற்றும் அனைத்து தொழிலாளர் சங்கங்களின் நிர்வாகிகளும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள்," என்று தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











