'இந்திப் பாடல்களின் ஆதிக்கத்தை ஒழித்தவர் இளையராஜா' - மு மேத்தா
ஈரோடு: தமிழகத்தில் நிலவிய இந்திப் பாடல்களின் ஆதிக்கத்தை ஒழித்தவர் இசைஞானி இளையராஜா என்றார் கவிஞர் மு மேத்தா.
ஈரோடு திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரி வளாகத்தில் நடந்த தமிழ் இலக்கியப் பேரவை அறக்கட்டளையின் ஆண்டு விழாவில் எஸ்கேஎம் இலக்கிய விருதைப் பெற்றுக் கொண்ட கவிஞர் மு.மேத்தா பேசியதாவது:

பேசுவதைவிட மௌனம் சிறந்தது. மௌனத்தைக் காட்டிலும் பெரிதாக எதுவும் பேசிவிட முடியாது. கலைஞர்களால் எதையும் சாதிக்க முடியும் என்பதைச் சாதித்து காட்டியவர் இளையராஜா.
ஒரு காலத்தில் தமிழகத்தில் உள்ள இளைஞர்களின் உதட்டில் இந்திப் பாடல்கள்தான் உச்சரிக்கப்படும். ஆனால், இந்தி திரைப்பட பாடல்களின் ஆதிக்கத்தை தமிழகத்தில் ஒழித்த பெருமை இளையராஜவுக்குத் தான் உண்டு.
எளிமையான ராகம் மிகுந்த நாட்டுப்புற பாடல்களை தமிழ் திரைப்படங்களில் புகுத்தி இந்தி திரைப்படப் பாடல்களுக்கு முடிவுகட்டியவர் இளையராஜா. இந்தியாவை பல ஆண்டுகளாக அடிமைப்படுத்தி வைத்திருந்த ஆங்கிலேயர்களை கூட தனது இசையால் அடிமைப்படுத்தி வைத்திருப்பவர் இளையராஜா.
தமிழகத்தில் உள்ள மூத்த தமிழ் அறிஞர்கள், இலக்கியவாதிகளால் பாராட்டப்பட்டு வருபவர்தான் இளையராஜா," என்றார்.
விழாவுக்கு, அறக்கட்டளைத் தலைவர் எஸ்கேஎம். மயிலானந்தன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் முஹம்மதுதாஜ் முஹையத்தீன் வரவேற்றார். செயலாளர் த.ஸ்டாலின் குணசேகரன் பாராட்டி பேசினார். அறக்கட்டளை துணைச் செயலர் மு.கண்ணையன் நன்றி தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











