இனி என் அனுமதியின்றி பாடல்களைப் பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை - இளையராஜா எச்சரிக்கை
சென்னை: இனி என் அனுமதியின்றி என் இசையையோ, பாடல்களையோ பயன்படுத்தினால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்தார்.
உலகின் தலைசிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்பவர் இசைஞானி இளையராஜா. கடந்த 1976-ம் ஆண்டு அன்னக்கிளி தொடங்கி, இன்று வரை பரபரப்பான இசையமைப்பாளராகத் திகழ்கிறார்.1000 படங்களுக்கு மேல் இசையமைத்து, 6500-க்கும் மேற்பட்ட பாடல்களை உருவாக்கியுள்ளார். சிறந்த இசையமைப்புக்காக 5 முறை தேசிய விருதுகளும் பெற்றுள்ளார்.

தடை
இந்நிலையில், இவருடைய இசையில் அமைந்துள்ள பாடல்களை இவருடைய அனுமதியின்றி சில நிறுவனங்கள் விற்பனை செய்து வருவதாக கடந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வெளியாகி, இவரது பாடல்களை விற்பனை செய்ய சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நிரந்தர தடை விதித்தது உயர்நீதிமன்றம்.

தயாரிப்பாளர் சங்கத்திடம்
இந்நிலையில், இளையராஜா தனது பாடல்களின் உரிமையை தற்போது தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு வழங்கியுள்ளார். தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரான கலைப்புலி தாணுவிடம் இவருடைய 1000 படங்களின் பாடல்கள் உரிமைகள் அனைத்தும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பேட்டி
இதுகுறித்து இன்று பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்த இளையராஜா கூறும்போது, "இனிமேல் என்னுடைய இசையை அதிகாரப்பூர்வமாக உலகளவில் எந்தவொரு மொபைல் நிறுவனமும், உலகளாவிய இணையதளங்களிலும், யூடியூப், டெய்லி மோஷன் போன்ற இன்னும் பல வீடியோ இணைய தளங்களிலும், ஆடியோ, வீடியோ விளம்பரங்களிலும், ரீமிக்ஸ் செய்யவோ, எப்.எம்., டிவியில் ஒலி / ஒளிபரப்பவோ, மேடை நிகழ்ச்சிகள் மற்றும் பொது இடங்களில் முறையற்ற வகையில் இசையை உபயோகிக்கவோ தயாரிப்பாளர் சங்கம் மூலம் என்னிடம் முறையான அனுமதி பெற வேண்டும்.

கடும் நடவடிக்கை
விதிமுறைகளை மீறும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார்.
இந்தப் பேட்டியின்போது கலைப்புலி தாணுவும் உடனிருந்தார்.


Click it and Unblock the Notifications











