திருவண்ணாமலையில் இளையராஜா ரசிகர்களின் சங்கமம்.. ஒரு ரசிகரின் ரிப்போர்ட்!
-டாக்டர் ஸ்ரீதர் முருகையன்
"இவை தானே என் ஆசைகள்..அன்பே.." என்று பிரதாப் போத்தன் அவர்கள் பாடுவதைப் போல், என் மனதில் வெகுநாட்களாய் ஒரு ஆசை குடியிருந்தது. திருவண்ணாமலையில் இசைஞானியின் இசை பற்றி கலந்துரையாட ஒரு நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்பது என் பல வருட கனவு.
நேற்றைக்கு அது சிறப்பாக நிறைவேறியது மனதுக்கு மிக நிறைவாகவும் நெகிழ்ச்சியாகவும் உள்ளது. இளையராஜா யாஹூ குழுமத்தின் 30 ஆவது கலந்துரையாடல் கூட்டமும் 15ஆம் ஆண்டு விழாவும் எளிமையாக திருவண்ணாமலை ரமணா டவர்ஸில் நேற்று அரங்கேறியது.
எங்களின் எளிமையான அழைப்பை ஏற்று சென்னை, கோவை, பெங்களூர், பாண்டிச்சேரி, நெய்வேலி என பல இடங்களிலிருந்தும் நண்பர்கள் வந்திருந்து நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

“பாலு மகேந்திராவும் இளையராஜாவும்”
"பாலு மகேந்திராவும் இளையராஜாவும்" என்ற தலைப்பில் இங்கு நாம் பேசியது மிகவும் ஏற்புடையதானது. ஏனெனில் இருவருக்குமே மிகவும் பிடித்த ஊர் திருவண்ணாமலை. என் நண்பர் டாக்டர்.விஜய் வெங்கட்ராமன் மிக அருமையாக நிகழ்ச்சியை ஒருங்கிணைத்ததோடு பல அறிய தகவல்களையும் பகிர்ந்து கொண்டார்.

“வண்ண வண்ண பூக்கள்”
நண்பர் விஜயபாஸ்கரன் "வண்ண வண்ண பூக்கள்" படத்தில் வந்த பாடல்களின் சிறப்புகளை ஒவ்வொரு பாடலாக சிறப்பாக பட்டியலிட்டார். அந்த படத்தின் கதாநாயகன் போலவே தனக்கும் வாழ ஆசை என்பதால் அந்த படம் தனக்கு மிகவும் பிடித்ததாக அவர் கூறினார். மேலும் அன்பு என்பதை எல்லா காலங்களிலும் வெளிக்காட்டிக் கொண்டே இருக்க முடியாது, அது மனதுக்குள்ளேயே இருந்தாலும் சம்பந்தப்பட்டவர்களால் அதை உணர முடியும் என்று அவர் கூறிய கருத்து இயல்பாக அவர் மனதிலிருந்து வெளிப்பட்ட நிதர்சனமான உண்மை.

என் இனிய பொன்நிலாவே
அடுத்து பேசிய திரு.சந்திரமௌலி அவர்கள், கர்நாடக இசை வல்லுனரான கே.ஜே.ஏசுதாஸ் அவர்களை மிக இயல்பாக "தததா..ததா.." என்று என் இனிய பொன்நிலாவே பாடலில் பாட வைத்த பெருமை மேற்கூறிய இருவருக்குத் தான் பொருந்தும் என்று அழகாக எடுத்துரைத்தார். திரு.கோதண்டராமன் அவர்கள் பலரும் விவாதிக்க மறந்த அறிய பாடல்களை நினைவூட்டி அற்புதமாக பேசினார். இடையிடையே நண்பர் திரு.பாலாஜி, நண்பர் டாக்டர்.மாதவன் ஆகியோர் மிக அருமையாகப் பாடி அந்த அமர்வை மேலும் அழகூட்டினர். நண்பர்கள் ராஜேஷ், மகேஷ் மற்றும் ஸ்ரீதர் வெள்ளியங்கிரி ஆகியோர் சிறப்பான கருத்துக்கள் பலவற்றை எடுத்துரைத்தனர்.

இலக்கியம் என்னும் மையப்புள்ளியில்
நண்பர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பல நுட்பமான கருத்துக்களை எடுத்துரைத்தார். இவர்கள் இருவருக்குள்ளும் அத்தனை அந்நியோன்யமான புரிதல் இருந்ததற்குக் காரணம் அவர்கள் இருவரும் இலக்கியம் என்னும் மையப்புள்ளியில் இணைந்தது தான் என்ற ஆணித்தரமான கருத்தை பதிவு செய்தார். பின்னணி இசையில் மௌனத்தின் பலமான பங்கை அவர் நுட்பமாக எடுத்துரைத்தார். விளிம்பு நிலை மனிதர்களின் மனப்பிறழ்வுகளை இவர்கள் இருவரும் பதிவு செய்துள்ள பாங்கை அழ்காக எடுத்துரைத்தார்.

ஒரு படத்தின் இசையை யார் தீர்மாணிப்பது?
நண்பர் "குக்கூ"முருகன் அவர்கள் ஒரு படத்தின் இசையை யார் தீர்மாணிப்பது? என்ற இளையராஜாவின் கேள்விக்கு பாலும்கேந்திரா அளித்த அற்புதமான விடையை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

எழுத்தாளர்.பவா செல்லதுரை
எல்லாவற்றுக்கும் முத்தாய்பாய் எழுத்தாளர்.பவா செல்லதுரை அவர்கள் தன் மனதிலிருந்த கருத்துக்களையெல்லாம் ஒரு பிரவாகமாக வெளிப்படுத்தி 45 நிமிட பேருரையாற்றினார். பாலு மகேந்திரா அவர்களுடன் மிகவும் நெருங்கிப் பழகியவர் என்ற முறையில் நமக்குத் தெரியாத பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். குறிப்பாக தலைமுறைகள் படத்தில் இடம்பெறாத ஆனால் திரைக்கதையில் இருந்த ஒரு காட்சியை அவர் விவரித்த போது என்னைப் போன்று பலரின் கண்களும் பணித்து விட்டது. அந்த அற்புதமான உரையை அவர் வழங்கியமைக்காக இளையராஜா யாஹூ குழுமத்தின் சார்பில் அவருக்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

“காட்டுவழி கால்நடையாப் போற தம்பி”
நிகழ்ச்சியின் போது வெகுநாட்களுக்குப் பிறகு மனம் திறந்து பாடும் வாய்ப்பு எனக்கும் கிட்டியது. இறுதியாக அது ஒரு கணாக்காலம் படத்தில் இசைஞானி இளையராஜா அவர்கள் எழுதி இசையமைத்துப் பாடிய "காட்டுவழி கால்நடையாப் போற தம்பி" என்ற பாடலை எல்லோரும் இணைந்து பாடியது இன்னும் சில நாட்களுக்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மறக்காது.

“வாழ்க்கை கனவில்ல நனவில்ல உண்மையடா..”
"வாழ்க்கை கனவில்ல நனவில்ல உண்மையடா.." என்று இசைஞானி பாடிய உண்மை, நிகழ்வு முழுதும் கலந்திருந்தது. இந்த நிகழ்வை வெற்றிகரமாக்கிய அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொண்டு அடுத்த கூட்டத்துக்காய் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்.


Click it and Unblock the Notifications











