இந்திய சினிமாவில் புதுமையை அறிமுகம் செய்த புரட்சியாளர் இளையாராஜா - சித் ஸ்ரீராம்
சென்னை: இந்திய சினிமாவிற்குள் புதுமையை அறிமுகப்படுத்திய புரட்சியாளர் இளையராஜா. அவரை சந்தித்த போது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. அவரின் இசையில் ஒரு பாடல் பாடியது எனக்கு நல்ல அனுபவமாக இருந்ததாக பாடகர் சித் ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் இசை கல்லூரியில் இசை தயாரிப்பு பயின்று இந்தியாவிற்கு வந்து இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் கடல் படத்தின் அடியே பாடலை பாடியதின் மூலம் பாடகராக தமிழ்த் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் சித் ஸ்ரீராம். இசை மீது ஆர்வம் இருக்கும் ஒவ்வொரு பாடகரும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஒரு பாடல் பாடிவிட மாட்டோமா என்று எங்கும் போது சித் ஸ்ரீராமிற்கு அடித்தது ஜாக்பாட்.

இவர் பாடிய முதல் பாடலே செம ஹிட்டாக அமைந்தது. அதை தொடர்ந்து பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார். குறிப்பாக ஐ படத்தின் என்னோடு நீ இருந்தால் பாடல் சூப்பர் டூப்பர் ஹிட். இந்த பாடலுக்காக பிலிம்ஃபேர் விருது பெற்றார்.
இவரது குரல் படத்தின் ஹீரோவிற்கு பொருத்தமாக இருக்குமா என்று இசை அமைப்பாளர்கள் யோசித்த நிலையில் அச்சம் என்பது மடமையடா படத்தின் தள்ளி போகாதே பாடல் மூலம் அவர்கள் சந்தேகம் தீர்ந்து அவர்களது எண்ணம் தலைகீழாக மாறியது.

இந்த படத்தின் மூலம் அவர் தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமானார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் தன்னுடைய இனிமையான குரலால் மக்களை ஈர்த்து வருகிறார்.
அது மட்டுமல்லால் இந்த அதிர்ஷ்டசாலிக்கு கிடைத்த மற்றுமொரு கோல்டன் ஆப்பர்சூனிட்டி மேஸ்ட்ரோ இளையராஜா அவரின் இசையில் ஒரு பாடல் பாடியது. தற்போது உருவாகி வரும் சைக்கோ படத்திற்கு இசையமைக்கிறார் இசைஞானி இளையராஜா. அப்படத்தில் ஒரு பாடல் பாடுவதற்கான வாய்ப்பு சித் ஸ்ரீராமிக்கு கிடைத்தது. கிடைத்த அற்புதமான வாய்ப்பை நழுவவிடாமல், சிறப்பாக பயன்படுத்திக்கொண்டார்.

சித் ஸ்ரீராம் ஒரு பேட்டியின் போது, இசைஞானி மற்றும் இசைப்புயல் இருவருடன் பணியாற்றிய அனுபவம் குறித்து நெகிழ்ச்சியுடன் பதிலளித்தார். இளையராஜா அவர்கள் இந்திய சினிமாவிற்குள் புதுமையை அறிமுகப்படுத்திய புரட்சியாளர். அவரை சந்தித்த போது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. அவரின் இசையில் ஒரு பாடல் பாடியது எனக்கு நல்ல அனுபவமாக இருந்தது.
என்னை என்னுடைய கம்ஃபோர்ட் லெவெலில் இருந்து வெளிக்கொண்டு வந்து வித்தியாசமான புது விதமான இசை தன்மையில் படவைத்தார். அவரின் பாடலை பதிவு செய்யும் போது என்னால் அந்த புது இசையை வளர்த்துக்கொள்ள முடிந்தது ஒரு இனிய அனுபவம். அவருக்கு என்ன தேவையோ அதை பாடகரிடம் இருந்து அழகாக எடுத்து கொள்வார்.
ஏ.ஆர். ரகுமான் அவர்கள் என்னை துணிச்சலோடு தேர்ந்தேடுத்து வாய்ப்பு கொடுத்தார். அன்று வாய்ப்பு தரவில்லை என்றால் இன்று என்னை எந்த ஒரு இசை அமைப்பாளருக்கும் தெரிய வந்திருக்காது.
இரண்டு முறை வாய்ப்பளித்து என்னுடைய திறமையை வெளிக்கொண்டு வந்து உலகிற்கு அறிமுகப்படுத்தியவர். ஏ.ஆர். ரகுமான் சார் என்னை பல விதமாக பாட்டு பாட வைத்து அதிலிருந்து சிறப்பானதாக எப்படி மாற்றலாம் என யோசித்து அதை வெளிக்கொண்டு வருவார்.
ஏ.ஆர்.ரகுமான், இளையராஜா என இருவரும் இசையமைக்கும் விதம் வித்தியாசமானது. இருவருக்கும் வெவ்வேறு பரிமாணங்கள் உண்டு. அவர்களின் இசையில் பாடியதின் மூலம் நான் பல்வேறு பட்ட நுணுக்கங்களை கற்றுகொண்டேன்.
இரண்டு இசை மேதைகளுடன் பணியாற்றி அனுபவம் மிகவும் அற்புதமானது. அந்த அனுபவங்கள் என் வாழ்நாள் முழுவதும் நிலைத்திருக்கும் என்றார் சித் ஸ்ரீராம்.
அவரின் இசை பயணம் மேலும் தொடர்ந்து பல வெற்றி பாடல்களை நமக்காக பாடி நம் காதுகளை குளிரவைக்க வாழ்த்துக்கள்.


Click it and Unblock the Notifications











