இசை என்பது ஒரு மாமருந்து என்பதை படித்திருப்பீர்கள். இதோ ஒரு அனுபவம்...
ரஜினி நடித்த 'ஜானி', 'கைகொடுக்கும் கை', 'மன்னன்', கமல் நடித்த 'வெற்றி விழா', 'மை டியர் மார்த்தாண்டன்' மற்றும் 'உதிரி பூக்கள்', 'நெஞ்சத்தை கிள்ளாதே', 'மெட்டி', 'நடிகன்', 'மலபார் போலீஸ்', 'கோவில்பட்டி வீரலட்சுமி' உள்பட தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, பெங்காலி, கன்னடம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 120 படங்களுக்கு மேல் ஒளிப்பதிவு செய்த ஜாம்பவான், அசோக்குமார்!

தமிழில் சில்க் ஸ்மிதா நடித்த 'அன்று பெய்த மழையில்', அன்றைய காலகட்டத்தில் ஆந்திராவை ஒரு கலக்கு கலக்கிய தெலுங்கு 'அபி நந்தனா', இந்தி 'காமாக்னி' உள்பட சில படங்களை அவர் இயக்கியுள்ளார்.

'ஜென்மபூமி', 'நெஞ்சத்தை கிள்ளாதே' படங்களுக்கு சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருது வாங்கியுள்ளார்.
திரையுலகில் எண்ணற்ற சாதனைகள் படைத்து, மற்ற மொழி தொழில்நுட்பக் கலைஞர்களை கோலிவுட் பக்கம் திரும்ப வைத்த பெருமைக்குரியவர் அசோக்குமார். இப்போது அவருக்கு உடல்நிலை சரியில்லை. சென்னையிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், தீவிர சிகிச்சைப் பிரிவில், உயரிய சிகிச்சை பெற்று வருகிறார்.
அவர் விரைவில் உடல்நிலை தேற வேண்டும் என்று தமிழ் திரையுலகினர் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.
நிற்க. சொல்ல வந்த விஷயம் என்ன தெரியுமா?
அசோக்குமாரை அருகிருந்து கவனித்துக் கொள்ளும் அவரது மகனும், 'தொட்டால் பூ மலரும்' உள்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவருமான ஆகாஷ், சொன்ன ஒரு தகவல் மெய் சிலிர்க்க வைத்தது.
அசோக்குமாருக்கு பழைய ஞாபகங்களைக் கொண்டு வருவதற்காக, தினமும் அவரது செவிகளில் ஹெட்போன் வைத்து இளையராஜாவின் பாடல்களை ஒலிக்க வைக்கிறார்களாம்.
இளையராஜா இசையில், மகேந்திரன் இயக்கத்தில், அசோக்குமாரின் அற்புதமான ஒளிப்பதிவில், 'நெஞ்சத்தை கிள்ளாதே' படத்துக்காகப் உருவாக்கப்பட்ட 'பருவமே... புதிய பாடல் பாடு' என்ற பாடலை அடிக்கடி ஒலிக்க வைக்கிறாராம். அசோக்குமார் ஒளிப்பதிவு செய்ததில், இந்தப் பாடல் காட்சிதான் அவருக்கு மிகவும் பிடித்ததாம். அதனால் அதை ஒலிபரப்பி, அவருக்கு பழைய ஞாபகம் திரும்பவும் வருகிறதா என்று ஆவலுடன் காத்திருக்கிறாராம்!

'பருவமே...' பாடலைக் கேட்கும்போது மட்டும், அசோக்குமாரிடம் சின்னச்சின்ன அசைவுகள் தெரிகிறதாம்... இதைக் கேட்கும்போதே நமக்கு மெய்சிலிர்த்தது. அதனால்தான் அவசர அவசரமாக இந்தப் பதிவு.
'இசை கேட்டால் புவி அசைந்தாடும்', 'இசையால் வசமாகா இதயம் எது' போன்ற பாடல்கள் இசையின் மேன்மையை நமக்குச் சொல்கின்றன. இசைமேதை இளையராஜாவின் இசை, அசோக்குமார் என்கிற உன்னதமான ஒளிப்பதிவுக் கலைஞனின் நினைவுகளை சில நிமிடங்களாவது மீட்டுத் தருகிறதே என்பதே மிகப் பெரிய ஆறுதல்தானே!


Click it and Unblock the Notifications











