இளையராஜா இசையில் புதுமுகங்கள் நடிக்கும் 'ஒரு ஊர்ல'!
புதுமுகங்கள் நடிக்கும் ஒரு ஊர்ல என்ற படத்துக்கு இசையமைக்கிறார் இளையராஜா.
விக்னேஷ் புரொடக்ஷன்ஸ் என்ற படநிறுவனம் சார்பாக பி.வேலுச்சாமி தயாரிக்கும் இந்தப் படத்தில், பருத்திவீரன் வெங்கடேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் பருத்திவீரன் படத்தில் பிரியாமணியின் முறை மாமன் வேடத்தில் நடித்தவர்.

கன்னட நாயகி
கதாநாயகியாக கன்னட நடிகை நேகா பட்டீல் அறிமுகமாகிறார். இந்திரஜித், அண்ணபூரணி, நான்கடவுள் முரளி, சுந்தர், சிவா, ஜப்பான் கண்ணன், முல்லை நடலரசு கோதண்டபாணி, மாதவி, வனஜோதி, பேபி சௌந்தர்யா என புதுமுக நடிகர்களுடன் கதாப்பாதிரங்களுக்கேற்ப ஏராளமான கிராம மக்களும் நடிகர் நடிகைகளாக தோன்றவிருக்கிறார்கள்.

இரு ஒளிப்பதிவாளர்கள்
பிசி ஸ்ரீராமின் உதவியாளர் அருள் வின்சென்ட் மற்றும் விஜய் மில்டனின் உதவியாளர் டிஎஸ் வாசன் இருவரும் ஒளிப்பதிவு செய்கிறார்கள்.

இளையராஜா
பாடல்களை மு மேத்தா எழுத, இளையராஜா இசையமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் கே.எஸ்.வசந்தகுமார்.
இவர் செல்வபாரதி, எ.வெங்கடேஷ், வின்சென்ட் செல்வா போன்றவர்களிடம் உதவியாளராக பணியாற்றியவர். அத்துடன் துஷ்யந்த் நடித்த "மச்சி" என்ற படத்தை இயக்கியவர், இந்த படத்தின் மூலம்தான் இசையமைப்பாளர் ரெஹைனா, பாடகர் கானா உலகநாதன் ஆகியோர் அறிமுகமானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்....
"கெட்டவன் மாதிரி இருக்கும் நல்லவன் வெங்கடேஷ் ! நல்லவன் மாதிரி இருக்கிற கெட்டவன் இந்திரஜித்... இதுமாதிரி பதினான்கு விதமான கதாபாத்திரங்களின் கிராமத்து யதார்த்த வாழ்க்கைதான் ‘ஒரு ஊர்ல"
படத்தில் வரும் ஒரு இரும்புக்கடையின் பிரம்மாண்டத்தை யாரும் இதுவரை திரையில் பார்த்திருக்க முடியாது.

முழுப் படத்தையும் பார்த்த பிறகே...
முழு படத்தையும் பார்த்து விட்டுத்தான் இளையராஜா சார் பாடல்களை கம்போஸ் செய்தார். அது மாதிரி அவர் இசையமைத்த பாடல்களும் படங்களும் வெற்றி பெற்றிருப்பது இதுவரை நடந்த நிஜம்...
இந்த படத்தில் இடம் பெரும் கிளைமாக்ஸ் சண்டை காட்சி பதினெட்டு நாட்கள் படமாக்கப்பட்டது. ஈ , காக்கா கூட பறக்க முடியாத 250 ஏக்கர் பொட்டல் காடு, மருந்துக்கு கூட ஒரு மரம் கிடையாது. அங்கு பதினெட்டு நாட்கள் படப்பிடிப்பு என்றால் யோசித்துப் பாருங்கள்," என்றார் இயக்குனர் கே.எஸ்.வசந்தகுமார்.


Click it and Unblock the Notifications











