களத்தூர் கிராமத்திற்கு இளையராஜா விதித்த நிபந்தனை!
சென்னை : நடிகர் கிஷோர், யக்னா ஷெட்டி ஆகியோர் நடிக்கும் படம் 'களத்தூர் கிராமம்'. இந்தப் படத்தை சரண் கே.அத்வைதன் இயக்க, ஏ ஆர் மூவி பாரடைஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
களத்தூர் கிராமம் படத்தில் இசையமைக்க இசைஞானி இளையராஜா எங்களுக்கு ஒரு நிபந்தனை விதித்தார் என படத்தின் இயக்குநர் சரண் கே.அத்வைதன் தெரிவித்தார். படத்தைப் பற்றி அவர் கூறியதாவது, 'இது ஒரு புறக்கணிக்கப்பட்ட கிராமத்தின் கதை. அந்தக் கிராமத்தை காவல்துறை வஞ்சிக்கிறது. இதனால் ஏமாற்றம் அடைந்த மக்கள் காவல்துறையை எதிர்க்கிறார்கள். இந்த வாழ்க்கைப் போராட்டத்தில் மக்கள் வெல்கிறார்களா காவல்துறை வெல்கிறதா என்பதே கதை.

ஆந்திர எல்லையில் இருக்கும் களத்தூர் எனும் கிராமம்தான் கதைக்களம். சீமைக்கருவேல மரங்களை வெட்டிக் கரிமூட்டம் போட்டுப் பிழைக்கும் மக்களை மையமாகக் கொண்ட கதை இது. இந்தப் படத்திற்கு இசையமைக்க இளையராஜாவிடம் கேட்டோம். அவர் இசையமைக்க ஒரு நிபந்தனை விதித்தார்.

'கதை நன்றாக இருக்கிறது, ஆனால் படத்தை எப்படி எடுப்பீர்கள் எனத் தெரியாது. கொஞ்சம் எடுத்துவிட்டு வந்து காட்டுங்கள். அதைப் பார்த்துவிட்டு பிறகு முடிவு செய்கிறேன்' எனச் சொல்லிவிட்டார். அவர் சொன்னபடி, சிலநாட்கள் காட்சிகள் எடுத்து அவரிடம் காட்டினோம். பார்த்துவிட்டு மகிழ்ச்சியாகப் பாராட்டியவர் இசையமைக்கவும் ஒப்புக்கொண்டார்.
இந்தப் படத்திற்காகத் தனி ஈடுபாடு காட்டி, மூன்று பாடல்களுக்கும் சிறப்பாக இசையமைத்துள்ளார். இதில் அவரே ஒரு பாடலை எழுதியிருக்கிறார்.' என இயக்குநர் சரண் கே.அத்வைதன் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











