நடிகர் எம்.என்.நம்பியார் தங்கிச் சென்ற இளையராஜாவின் கெஸ்ட் ஹவுஸ்! - வேத பாடசாலையானது
சென்னை : பழம்பெரும் நடிகர் எம்.என்.நம்பியாரின் நூற்றாண்டு விழா நேற்று சென்னையில் கொண்டாடப்பட்டநிலையில், அவர் பற்றிய இதுவரை அறியப்படாத பல விஷயங்களை, அவருடன் பழகிய பல சினிமா பிரமுகர்கள் பகிர்ந்துக் கொண்டார்கள். அந்த வகையில், நம்பியார் நூற்றாண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட இசையமைப்பாளர் இளையராஜாவும், நம்பியார் உடனான தனது அனுபவத்தை பகிர்ந்துக் கொண்டார்.
சென்னை மியூசிக் அகாடமியில் நேற்று இரவு நடைபெற்ற நம்பியார் நூற்றாண்டு விழாவில், காவல் துறை அதிகாரி விஜயகுமார், இசையமைப்பாளர் இளையராஜா, நடிகர் சிவக்குமார் உள்ளிட்டவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டார்கள். இவர்களுடன் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமான அரசியல் பிரமுகர்களும், சினிமா பிரபலங்களும் கலந்துக் கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் பேசிய இளையராஜா, தான் நம்பியார் உடன் 1980 ஆம் ஆண்டு மாலை போட்டு சபரிமலை சென்றேன். அதன் பிறகு நான் சபரிமலைக்கு செல்வதற்கான நேரம் கிடைக்கவில்லை. வேலை அதிகரித்ததால் என்னால் தொடர்ந்து போக முடியவில்லை. ஆனால், சினிமாக்காரர்களிடம் ஆன்மீக சிந்தனைகள் உதிக்கச் செய்ததில் நம்பியார் சாமிக்கு முக்கிய பங்கு உண்டு. அவர்களை சபரிமலைக்கு மாலை போட வைத்ததிலும் அவருக்கு முக்கிய பங்கு உண்டு, என்று தெரிவித்தார்.

சினிமாவில் நம்பியார் 1000 படங்களுக்கு மேல் நடித்தார், என்பதெல்லாம் சாதாரணமான ஒன்று தான். ஆனால், அவர் சினிமாவில் இருந்துக் கொண்டு, நிஜ வாழ்க்கையில் நடிக்காமல் இருந்தாரே, அது தான் முக்கியம். அப்படி யாராலும் வாழ முடியாது, என்ற இளையராஜா, நடிப்பு என்பது தொழில் அதை நிஜ வாழ்க்கையில் செய்யக் கூடாது, என்பதில் தெளிவாகவும், உறுதியாகவும் இருந்தவர் நம்பியார், என்றும் கூறினார்.

இளையராஜாவுக்கு தேக்கடியில் ஹெஸ்ட் ஹவுஸ் ஒன்று இருக்கிறதாம். ஆனால், வேலை பளு காரணமாக அந்த ஹெஸ்ட் ஹவுஸுக்கு அவரால் அடிக்கடி சென்றுவர முடியாதாம். அதே சமயம், நடிகர் நம்பியார், சபரிமலைக்கு செல்லும் ஒவ்வொரு ஆண்டும் இளையராஜாவின் தேக்கடி ஹெஸ்ட் ஹவுஸுக்கு சென்று தங்கிவிட்டு வருவாராம். அவர் தங்கியதால் என்னவோ, அந்த கெஸ்ட் ஹவுஸ் தற்போது வேத பாடசாலையாக மாறிவிட்டதாக, இளையராஜா தெரிவித்துள்ளார்.

இயற்கை எழில் மிகுந்த தேக்கடி பகுதியில் இருக்கும் இளையராஜாவின் ஹெஸ்ட் ஹவுஸ் தற்போது வேத பாடசாலையாக மாறியதோடு, அங்கு 5 வயது முதல் 12 வயதுடைய சிறுவர்கள் வேதங்கள் கற்று வருகிறார்களாம். இதற்காக இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மாணவர்கள் வருகிறார்களாம். இதற்கு காரணம் நம்பியாரின் ஆத்மா தான், என்றும் இளையராஜா கூறினார்.




Click it and Unblock the Notifications











