ஏஜிஎஸ் நிறுவனத்தில் வருமான வரித்துறை திடீர் ரெய்டு.. வரி ஏய்ப்பு புகாரால் 20 இடங்களில் அதிரடி!
சென்னை: வரி ஏய்ப்பு புகாரை தொடர்ந்து விஜயின் பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ஏஜிஎஸ் நிறுவனம். இந்நிறுவனம் படங்களை தயாரிப்பது, டிஸ்ட்ரிப்யூஷன் செய்வது உள்ளிட்ட தொழில்களை மேற்கொண்டு வருகிறது.

ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு என மல்ட்டிப்ளக்ஸ் தியேட்டர்களும் உள்ளன. இந்நிலையில் ஏ.ஜி.எஸ் குழுமத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதன்படி சென்னை தி.நகரில் உள்ள வீடு, தேனாம்பேட்டையில் உள்ள அலுவலகம், வில்லிவாக்கத்தில் உள்ள தியேட்டர் அலுவலகம் உள்பட 20 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.வரி ஏய்ப்பு புகாரின் பேரில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இதில் 50க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் பங்கேற்றிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
2006ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஏஜிஎஸ் நிறுவனம், தனது முதல் புரடெக்ஷனாக திருட்டுப்பயலே படத்தை தயாரித்தது. இதனை தொடர்ந்து சந்தோஷ் சுப்ரமணியம், மாசிலாமணி, மதராசப்பட்டினம் எங்கேயும் காதல் உள்ளிட்ட படங்களை தயாரித்திருக்கிறது. நவீன சரஸ்வதி சபதம், தெனாளி ராமன், இரும்பு குதிரை, தனி ஒருவன், அனேகன் உள்ளிட்ட படங்களை தயாரித்த ஏஜிஎஸ் என்டெர்டெய்ன்மென்ட் கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தை தயாரித்தது.
இதுமட்டுமின்றி, மைனா, பயணம், அவன் இவன், அனேகன், தனி ஒருவன், கவன், பிகில் உள்ளிட்ட படங்களையும் வெளியிட்டுள்ளது ஏஜிஎஸ் என்டெர்டெய்ன்மென்ட். பிகில் படத்தால் நஷ்டம் என தகவல் வெளியான நிலையில் வருமான வரித்துறை இந்த அதிரடி ரெய்டை மேற்கொண்டு வருகிறது.


Click it and Unblock the Notifications











