’இந்தத்தேகம் மறைந்தாலும், இசையாய் மலர்வேன்’..எஸ்பிபி-யின் நினைவிடத்தில் நடிகர் ’மைக்’ மோகன் உருக்கம்
நடிகர் மைக் மோகன் திரை வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கின்ற பாடல்களுக்கு குரல் கொடுத்து பெருமை சேர்த்தவர் எஸ்பிபி.
மோகனின் பெரும்பாலான பாடல்கள் ஓடியதற்கு முக்கிய காரணமே இளையராஜாவின் இசையும் எஸ்பிபி-யின் குரலும் என்றால் அது மிகையாகாது.
எஸ்பிபி மீது மிகுந்த பற்று கொண்ட நடிகர் மோகன் அவரது நினைவிடத்திற்கு சென்று மலர்வலையம் வைத்து தியானம் செய்து அஞ்சலி செலுத்தினார்.

சாதனையாளர்களை கண்ட தமிழகம்
தமிழ் திரையுலகம் எத்தனையோ சாதனையாளர்களை பார்த்துள்ளது. திரைப்படம் மூலம் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்பதை முதலில் நிரூபித்தவர் எம்ஜிஆர். நடிப்பு மூலம் உலக நாட்டு கலைஞர்களாலும் மதிக்கப்பட்டவர் சிவாஜி. இசைப் பயணத்தில் சாதனை படைத்த கே.வி.எம், எம்எஸ்வி, இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், தந்நிகரில்லா குரலுக்கு சொந்தக்காரரான டிஎம்எஸ், பிபிஎஸ், எஸ்பிபி, சுசிலா, ஜானகி போன்றவர்களை தந்த தமிழ் திரையுலகம்.

வியத்தகு சாதனைகளுக்கு சொந்தக்காரர் எஸ்பிபி
இதில் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு எப்போதும் தனி இடம் உண்டு. சாதனைகள் மேல் சாதனைகள் செய்தாலும் சிறிதும் கர்வம் இன்றி அன்றுதான் பாட வந்த பாடகர் போல் பணிவுடன் நடந்து கொள்வதில் அவரை அடித்துக் கொள்ள யாரும் இல்லை. கின்னஸ் சாதனை செய்தும், இந்திய மொழிகளில் பெரும்பாலான மொழிகளில் பாடி இந்திய கதாநாயகர்கள் பெரும்பாலோருக்கு குரல் கொடுத்தவர், ஒரே நாளில் 21 பாடல்கள் வரை பாடி சாதனை செய்தவர் என்கிற பெருமைக்குரிய எஸ்பி. பாலசுப்ரமணியம் எப்போதும் தன்னை முன்னிறுத்துக் கொள்ளவே மாட்டார். மேடையில் எப்பொழுதும் தன்னுடைய குருநாதர் பற்றியும், தனக்கு வாய்ப்பளித்த எம்.எஸ்.வி பற்றியும் தன்னுடன் வளர்ந்த நண்பன் இளையராஜா பற்றியும் எப்பொழுதும் சிலாகித்து பேசுவது எஸ்பிபி வழக்கம்.

மன அழகு மிக்க எஸ்பிபி
இதுவரை எஸ்பிபி யாரை பற்றியும் தவறாக சரியில்லாத நபர் என்று சொல்லி பேசியதாக வரலாறு இல்லை தன்னை பற்றி பெருமை பேசியதாகவும் வரலாறு இல்லை. தன்னுடைய பாடல்களால் மட்டுமல்ல தன்னுடைய பணிவான மற்றவர்களுடைய சிறிய சாதனையில் கூட பெருமிதமாக பாராட்டும் பண்பால் எஸ்பி.பாலசுப்ரமணியம் தமிழக ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். தமிழக ரசிகர்கள் மட்டுமல்ல தெலுங்கு, கன்னட, மலையாள, பாலிவுட் ரசிகர்களும் எஸ்பிபியை மிகவும் நேசித்தனர். எஸ்.பி.பாலசுப்ரமணியம் எப்பொழுதும் நகைச்சுவை உணர்வு மிக்கவர். தன்னுடன் பாடுபவர்கள் தயக்கத்தை போக்க அவர்களுடன் இணைந்து எதையாவது நகைச்சுவையாக செய்து அவர்களை சாதாரண மன நிலைக்கு கொண்டு வருவதில் வல்லவர். அப்படி மேடைகளில் அவர் அடிக்கும் லூட்டிகள் தனி ரகம்.

74 வயதிலும் இளமையான குரலுக்கு சொந்தக்காரராக இருந்த எஸ்பிபி
1960 களின் மத்தியில் எம்ஜிஆருக்காக பாடத் தொடங்கிய எஸ்பிபி 74 வயது வரை பாடிக் கொண்டிருந்தார் என்பது ஆச்சரியமான விஷயம். இன்னொரு ஆச்சரியமான விஷயம் அவரது முதல் பாடலான இயற்கை எனும் இளையகன்னி பாடலை 70 வயதிலும் அவர் பாடும் பொழுது அதே குரலில் இருந்தது அவருக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம். இப்படிப்பட்ட எஸ்பிபி தமிழகத்தில் 80-களில் மிக பிசியான பாடகராக இருந்தார். அந்த நேரத்தில் அறிமுகமான ரஜினி, கமல், விஜயகாந்த், மோகன் உள்ளிட்ட பலருக்கும் எஸ்பிபியின் குரல் தான் முகவரி. ரஜினிகாந்தின் மை நேம் இஸ் பில்லா உள்ளிட்ட பல பாடல்கள் அவருடைய காந்த குரலால் பெரிய பேர் கிடைத்தது.

பருவமே புதிய பாடல் பாடு பாடல்
கமல்ஹாசனுக்கு சொல்லவே வேண்டாம், கமல் பாடுகிறாரா? எஸ்.பி.பி பாடுகிறார் என்று தெரியாத அளவிற்கு அத்தனை பாடல்களை பாடியுள்ளார். இவைகளுக்கு நடுவே புதிதாக முளைத்தார் மோகன். என்பதுகளின் ஆரம்பங்களில் அறிமுகமானார் மோகன். அவருடன் அறிமுகமான சுஹாசினியுடன் சேர்ந்து இருவரும் ஜாக்கிங் போகும் பாடல் "பருவமே புதிய பாடல் பாடு" என்கிற அந்த பாடல் பட்டிதொட்டியெங்கும் பிரபலமான பாடல். எஸ்.பி.பி முதல் படத்திலிருந்து இப்படி மோகனுக்கும் எஸ்பிபிக்குமான உறவு ஆரம்பமானது.

மைக் மோகனுக்கு வடிவம் கொடுத்த எஸ்பிபி
அதன் பின்னர் மோகன் நடித்த பல படங்களுக்கு எஸ்பிபியின் குரல் வெகுவாக பொருந்திப் போனது. மதர் லேண்ட் பிக்சர்ஸ்க்காக மோகன் நடித்து எடுக்கப்பட்ட அனைத்து படங்களிலும் எஸ்பிபியின் பாடல்களும், இளையராஜாவின் இசையும் ஆதிக்கம் செலுத்தின. அதிலும் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால் கவிஞர் கண்ணதாசனை பற்றி கூறும்பொழுது அவர் எழுதிய கருப்பு பணம் படத்தில் வரும் பாடலில் வரும் வரிகளான "நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணம் இல்லை" என்ற வரிகளை குறிப்பிடுவார்கள். அது போல் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் நிலா பாலு என்கிற பெயர் எடுத்தாலும் அவரைப் பற்றி குறிப்பிடும் பொழுது வரும் வரிகள் "இந்தத்தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்" என்கிற பாடல் வரிகளை சொல்வார்கள்.

கொடிய கொரோனா பாதிப்பில் மீளாமல் மறைந்த எஸ்பிபி
கொடிய கொரோனா உலகை ஆட்டிப் படைத்த பொழுது கொரோனா பாதிப்பு உள்ளான எஸ்பிபி தான் சிகிச்சைக்குப் போகும் முன் காணொளி மூலம் வேண்டுகோள் வைத்த எஸ்பிபி அனைத்து ரசிகர்களுக்கும் கோரிக்கையாக வைத்தது கொரோனா பரவுகிறது ஜாக்கிரதையாக இருங்கள், முக கவசம் அணியுங்கள் என்று சொல்லிவிட்டு சிகிச்சைக்கு சென்றார். அதுவே அவர் அனைவர் முன் பேசும் கடைசி பேச்சு என்று அன்று யாரும் அறிந்திருக்கவில்லை. பல நாட்கள் சிகிச்சைக்கு பின் மருத்துவமனையில் இருந்து திரும்பாமலேயே எஸ்பிபி உலகை விட்டு மறைந்தார். அப்பொழுது பட்டி தொட்டி எங்கும் ஒலித்த பாடல் சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம், அதில் வரும் முக்கிய வரிகளாக "இந்தத்தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்" என்கிற வரிகள் அந்த வரிகளை கேட்டு கண்ணீர் சிந்தாத ரசிகர்களே இல்லை என்று சொல்லலாம்.

எஸ்பிபியின் நினைவிடத்தில் நடிகர் மோகன் உருக்கமான அஞ்சலி
அவரது நினைவிடம் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளது. நடிகர் மோகன் தன்னுடைய நாற்பதாவது ஆண்டு திரையுலக வாழ்க்கையை கொண்டாடி வருகிறார். சமீபத்தில் அவருக்கு பிறந்தநாள் வந்தது. இதையொட்டி எஸ்பிபி யின் நினைவிடத்திற்கு சென்ற மோகன் அங்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அந்த நேரத்தில் அவரால் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியவில்லை. எஸ்பிபி யின் நினைவிடத்தில் உள்ள சுவரை தன் கைகளால் தடவிக் கொண்டிருந்தார். பின்னர் தனியாக அமர்ந்து தியானம் செய்தார். நினைவிடத்தை சுற்றிப்பார்த்த நேரங்களில் அவரது கண்கள் விரிய பழைய நினைவுக்கு போய்விட்டது நன்றாக தெரிந்தது.

உணர்ச்சி வயப்பட்ட நிலையில் மோகன்
உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் விட்டால் சரியாக இருக்காது என்பதால் ஒரு மாதிரி கண்களை விரித்துக்கொண்டு அவர் அந்த இடத்தில் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் இருந்ததை காண முடிந்தது. அவருக்கு அந்த நினைவிடத்தில் உள்ள பகுதிகளை பற்றி அங்குள்ள ஒருவர் விளக்கி சொல்லிக் கொண்டிருக்கிறார், அவைகளை அவர் காது கொடுத்து கேட்டாரா? உள் வாங்கினாரா இல்லையா? என்பது தெரியவில்லை. ஒரு முக்கியமான இடத்திற்கு வந்த பக்தன் போல் ஒரு பரவசப்பட்ட மனநிலையில் இருந்ததை அவர் முகம் காண்பித்தது.


Click it and Unblock the Notifications











