ஆஸ்கர் மங்கை பானு அத்தையா காலமானார்.. அகாடமி விருதை வென்ற முதல் இந்தியர்.. பிரபலங்கள் இரங்கல்
மும்பை: ஆஸ்கர் விருதை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான ஆடை வடிவமைப்பாளர் பானு அத்தையா (Bhanu Athaiya) காலமானர். அவருக்கு வயது 91.
உடல் நலக்குறைவு காரணமாக வியாழன்று (இன்று) மும்பையில் இயற்கை எய்தியுள்ளார் பானு அத்தையா.
பானு அத்தையா உயிரிழந்த விவரத்தை அவரது மகள் அறிவித்த நிலையில், இந்திய பிரபலங்கள் அந்த லேடி ஜாம்பவானுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

ஆஸ்கர் மங்கை
1929ம் ஆண்டு ஏப்ரல் 28ம் தேதி மகராஷ்ட்ராவின் கோஹ்லாபூரில் பிறந்தவர். இவரது இயற்பெயர் பானுமதி அன்னாசாகேப் ராஜோபதாயே. திரைப்படங்களில் ஆடை வடிவமைப்பாளராக அசத்திய இவர், தனது பெயரை சுருக்கி பானு அத்தையா என்ற பெயரில் வலம் வந்தார். ஃபேஷன் டிசைனிங்கில் ஆர்வம் கொண்ட இவர், இந்தியாவின் முதல் ஆஸ்கர் விருது வென்றவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர்.

எந்த படத்திற்கு
1983ம் ஆண்டு காந்தி படத்திற்காக சிறந்த காஸ்ட்யூம் டிசைனர் விருதை தட்டிச் சென்றார் பானு அத்தையா. ஹாலிவுட் இயக்குநர் ரிச்சர்ட் அட்டன்பாரோ இயக்கத்தில் பென் கிங்ஸ்லி காந்தியாக நடித்து 1982ம் வெளியான அந்த படத்திற்கு 55வது அகாடமி விருது விழாவில் 8 ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

8 ஆண்டுகளாக கேன்சருடன் போராட்டம்
இன்று அதிகாலை உயிரிழந்த ஆடை வடிவமைப்பாளர் பானு, கடந்த 8 ஆண்டுகளாக மூளைக் கட்டி (Brain Cancer) உடன் போராடி வந்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டு இருந்த அவர், படுத்த படுக்கையாக இருந்த நிலையில், உயிரிழந்தார் என்கிற தகவலை அவரது மகள் தெரிவித்துள்ளார்.

போனி கபூர் இரங்கல்
இந்தியாவின் தலை சிறந்த ஆடை வடிவமைப்பாளரான பானு அத்தையாவின் மறைவு திரையுலகத்திற்கு மற்றுமொரு பேரிழப்பாக அமைந்துள்ளது. வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், அவரது சாதனைகளை பட்டியலிட்டு பானுவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். 1995ம் ஆண்டு வெளியான தனது பிரேம் படத்தில் அவர் பணிபுரிந்தது எங்களின் பாக்கியம் என்றார்.

எனக்கு பேரிழப்பு
ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக ஆஸ்கர் பெற்ற ரசூல் பூக்குட்டியும் தனது ட்விட்டர் பக்கத்தில் அவரது மறைவிற்காக ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். ஆஸ்கர் வென்ற முதல் இந்தியர் பானு அத்தையா நம்மை விட்டு பிரிந்து சென்று விட்டார். இது எனக்கு தனிப்பட்ட இழப்பு. ஆஸ்கர் என்றால் என்னவென்றே தெரியாத சமயத்தில், ஆஸ்கர் வென்று இந்தியர்களுக்கு வழிகாட்டியவர் அவர் என புகழாரம் சூட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications











