எப்படி விபத்து நடந்துச்சு? விவரிக்க ஈவிபி பிலிம் சிட்டியில் போலீசார் முன் ஆஜரானார் இயக்குநர் ஷங்கர்!
சென்னை: இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் எப்படி விபத்து நடந்தது என்பது குறித்து செய்து காட்ட ஈவிபி பிலிம் சிட்டியில் இயக்குநர் ஷங்கர் நேரில் ஆஜராகியுள்ளார்.
கமல் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கி வரும் படம் இந்தியன் 2. இந்தப் படத்தை லைகா புரடெக்ஷன்ஸ் நிறுவனம் பெரும் பொருட் செலவில் தயாரித்து வருகிறது.
இந்தப்படத்தின் ஷுட்டிங் சென்னை நசரத் பேட்டை அருகே உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது.

3 பேர் பலி
இந்நிலையில் கடந்த மாதம் 19 ஆம் தேதி இரவு படப்பிடிப்பின் போது, பிரமாண்ட மின் விளக்குகள் அமைக்கப்பட்டிருந்த கிரேன் திடீரென சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் உதவி இயக்குநரும் பிரபல கார்ட்டூனிஸ்ட் மதனின் மருமகனுமான கிருஷ்ணா, தயாரிப்பு தரப்பை சேர்ந்த மது, சந்திரன் ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர்.

விசாரணை
இந்த சம்பவம் தொடர்பாக நசரத் பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் இந்த வழக்கு மத்திய குற்றப் புலனாய்வு துறைக்கு மாற்றப்பட்டது. இதுதொடர்பாக விபத்து நடந்த இடத்தில் இருந்த இயக்குநர் ஷங்கர் மற்றும் நடிகர் கமல்ஹாசன் உட்பட அங்கிருந்தவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

விபத்துக்குறித்து விளக்கம்
ஏற்கனவே இயக்குநர் ஷங்கர் மற்றும் நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் சென்னை வேப்பேரியில் உள்ள மத்திய குற்றப்புலனாய்வுத் துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். நடிகர் கமல் அந்த கோர விபத்தில் இருந்து நூலிழையில் தப்பியதாக கூறினார்.

கமலுக்கு விலக்கு
இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் ஷங்கர் ஆகியோர் உள்ளிட்ட 24 பேரை விபத்து நடந்த படப்பிடிப்பு தளத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று மத்திய குற்றப்பிரிவு போலீசார் மீண்டும் சம்மன் அனுப்பி இருந்தனர். இதில் நடிகர் கமல்ஹாசன் படப்பிடிப்பு தளத்தில் நேரில் ஆஜராக விலக்கு அளித்து சென்னை ஹைகோர்ட்டு நேற்று உத்தரவிட்டது.

எப்படி நடந்துச்சு?
இதனை தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் உள்ளிட்ட மற்றவர்கள் இன்று விபத்து நடந்த படப்பிடிப்பு தளத்தில் நேரில் ஆஜராகியுள்ளனர். அவர்களிடம் விபத்து எவ்வாறு நடந்தது? என்று துணை கமிஷனர் நாகஜோதி தலைமையிலான மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











