எனது அரசு சினிமாவுக்கு எப்போதுமே நிலையான ஆதரவை வழங்கி வருகிறது: ஜெயலலிதா
சென்னை: தான் ஆட்சிக்கு வருகின்ற காலங்களில் எல்லாம், தமிழ் சினிமாத்துறைக்கு தனது அரசு எப்போதுமே நிலையான ஆதரவை அளித்து வருவதாக தெரிவித்துள்ளார் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா.
தமிழ்நாடு அரசு மற்றும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை இணைந்து கடந்த 4 நாட்களாக சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவை நடத்தி வந்தன.
அதன் நிறைவு விழாவான நேற்று, விழாவில் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, கேரள முதலமைச்சர் உம்மன்சாண்டி மற்றும் சினிமா பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பேசும்போது, தந்து ஆட்சிக் காலத்தில் சினிமாவிற்கு தந்து ஆதரவு எப்போதுமே உண்டு எனத் தெரிவித்தார்.
மேலும், இது குறித்து அவர் பேசியதாவது....

பெருமை ...
இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டிருக்கும் நம் ஒவ்வொருவருக்கும் பெருமை உண்டு. இந்தியாவில் சினிமா வரலாறுகளைப் படைத்து சாதனைகளை எட்டியுள்ளது.

சினிமா ஒரு கருவி...
சமுதாயத்தில் சினிமாக்களின் தாக்கம் குறித்து உலகில் உள்ள அனைவருமே அறிந்து, அதை ஏற்றுக்கொண்டுள்ளனர். மனித கலாசாரத்தில் சினிமா கலந்திருப்பதோடு, கல்வி, பொழுதுபோக்கு, பிரசாரங்களை மக்களிடையே சுமந்து செல்லும் கருவியாய் விளங்குகிறது.

லுமையர் பிரதர்ஸ் கருத்து தவறு....
உலகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நாளில் இருந்து, மக்களிடையே ஆதிக்கம் செலுத்தும் மீடியாவாக சினிமா திகழ்ந்து வருகிறது. சினிமாட்டோகிராபியை அறிமுகம் செய்த லுமையர் சகோதரர்கள், இது ஒரு எதிர்காலமற்ற கண்டுபிடிப்பு என்றனர். ஆனால் அது தவறு என்பதை நமது இந்த விழா கொண்டாட்டம் நிரூபிக்கிறது. சினிமாவுக்கு மேலும் நல்ல எதிர்காலத்தை நாம் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

தனிப்பட்ட அடையாளம்....
இந்திய சினிமாக்களுக்கு தனிப்பட்ட அடையாளம் உண்டு. நாட்டில் நிலவும் சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் கலாசார மாற்றங்களை இந்திய சினிமா பிரதிபலிக்கிறது. மும்பை, கொல்கத்தா, சென்னையைச் சேர்ந்த பலர், மவுனப்படங்களை தயாரித்து சகாப்தம் படைத்துள்ளனர்.

வர்த்தக ரீதியான வளர்ச்சி....
1920-ம் ஆண்டில் சினிமா தயாரிப்பு என்பது ஒரு தொழில் நிறுவனமாக வளர்ச்சி பெற்றது. 1931-ம் ஆண்டில் சினிமா தயாரிப்பு எண்ணிக்கை 207 ஆக உயர்ந்தது. அதன் பிறகு வர்த்தக ரீதியான சினிமாக்கள் தயாரிப்பின் ஆதிக்கம் தொடங்கியது. ராஜா ஹரிச்சந்திரா படத்தின் வெற்றிக்கு பிறகு பலர் மவுனப்படங்கள் தயாரிக்கத்தொடங்கினர்.

சினிமா தலைமையிடங்கள்....
1920-ம் ஆண்டின் மத்தியில், சினிமா குறித்த விஷயங்களின் மையமாக சென்னை திகழத்தொடங்கியது. சினிமாக்களின் தலைமையிடங்களாக அப்போது மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய பட்டணங்கள்தான் இருந்தன.

இந்திய சினிமாக்களின் ஆதிக்கம்...
1940-50-ம் ஆண்டுகளில் பாட்டு, நாட்டியம், பின்னணி இசை, ஆகியவை சினிமாக்களின் முக்கிய அங்கமாக இடம் பிடித்தன. 1970-ம் ஆண்டுகளுக்கு பிறகு வர்த்தக ரீதியான சினிமா தயாரிப்பு, இதுவரை இல்லாத அளவுக்கு பெருவளர்ச்சி கண்டது. ரசிகர்களுக்கு இந்திய சினிமாக்கள் விருந்து படைக்கின்றன. இந்திய மக்களை மட்டுமல்ல உலக சினிமாத்துறையிலும் இந்திய சினிமாக்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன.

நட்சத்திர அடையாளம்....
இந்தியாவில் வாழும் வாழ்க்கையில், சினிமா, பாட்டு, நாட்டியம், அறிவுரைகள் ஆகியவற்றின் தாக்கங்கள் இல்லாமல் இருக்காது. சுதந்திர போராட்டங்கள் முதல் தற்போதைய பிரச்சினை வரை சினிமாக்களில் காண முடியும். சினிமாத்துறையில் எண்ணிலடங்காத நபர்கள் இடம் பெற்றிருந்தாலும், சிலர் மட்டுமே அடையாளம் பெறுகின்றனர். என்றாலும், சினிமா திரையிலும், திரையின் பின்னணியில் பணியாற்றிய ஒவ்வொருவருமே சினிமா வரலாற்றில் சில செதுக்கல்களை செய்துள்ளனர்.

முதல் பெண் டாக்டர்....
இந்திய சினிமாவுக்கு முதல் பெண் டைரக்டரை வழங்கிய பெருமை தமிழகத்துக்குத்தான் உண்டு. அவர் சினிமா ராணி என்று அழைக்கப்பட்ட டி.பி.ராஜலட்சுமி. எனது உத்தரவின் அடிப்படையில் அவரது பிறந்த நாள் நூற்றாண்டு விழா சமீபத்தில் அரசு நிகழ்ச்சியாக கொண்டாடப்பட்டது.

சினிமாவின் பொற்காலம்....
1950-60-ம் ஆண்டுகள்தான் இந்திய சினிமாவின் பொற்காலம் என்று அழைக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில்தான் மக்கள் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றுள்ள மறக்கவே முடியாத நடிகர் எம்.ஜி.ஆர்., வெள்ளித்திரையில் தோன்றினார். அவர் தமிழ் சினிமாவில் அழியாத இடத்தை பெற்றிருக்கிறார்.

எனது ஆதரவு....
தமிழ் சினிமா உலகிற்கு தேவையான ஊக்கத்தையும், உதவிகளையும் வழங்கி, அதன் பின்னணியில் தமிழக அரசு திடமான ஆதாரமாக நிற்கிறது. நான் எப்போதெல்லாம் தமிழகத்தில் ஆட்சிக்கு வருகிறேனோ, அப்போதெல்லாம் தமிழ் சினிமாத்துறைக்கு தேவையான ஆதரவையும் ஊக்கத்தையும் வழங்கி வருகிறேன்.

ரசிகனே நீதிபதி....
ரசிகன் இல்லாமல் சினிமா இல்லை. 100 ஆண்டுகளை இந்திய சினிமா கடந்து செல்கிறது என்றால், அது ரசிகர்களின் அமோக ஆதரவு மற்றும் நல்லெண்ணத்திலான ஊக்கத்தினால்தான். எனவே அடையாளம் காணப்படாத, ஆனால் தவிர்க்க முடியாத தனிப்பட்ட ரசிகனே, நீதிபதியாக இருக்கிறான் என்பதை சினிமா உலகம் எப்போதும் தனது மனதில் கொண்டிருக்க வேண்டும்.

நல்ல சினிமாக்கள்....
வாழ்நாள் முழுவதும் இதயத்திலும், மனச்சாட்சியிலும் பதிவாகும் வகையில் சினிமாக்களை கொண்டு வருவதை கனவாகக் கொள்ளுங்கள்' என இவ்வாறு அவர் உரையாற்றினார்.


Click it and Unblock the Notifications











