ஆக்ஷன் அட்வென்ச்சர் படமாக 'இந்திரஜித்' வென்றதா? - படம் எப்படி? #IndrajithReview
கலைப்புலி எஸ்.தாணுவின் தயாரிப்பில் அவரது மகன் கலாபிரபு இயக்கத்தில் கௌதம் கார்த்திக், சொனாரிகா பதோரியா, அஷ்ரிதா ஷெட்டி ஆகியோர் நடித்திருக்கும் படம் 'இந்திரஜித்'. கவிஞர் அறிவுமதியின் மகன் இராசாமதி இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். கிருஷ்ண பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
ராவணனின் மகனான இந்திரஜித் பெயர்தான் இந்தப் படத்தின் டைட்டிலாக வைக்கப்பட்டிருக்கிறது. இந்திரஜித் தனது தந்தையைப் போலவே சிவபக்தர். கடும் தவத்தினால் அவருக்கு ஒரு சிவலிங்கம் கிடைக்கிறது. அந்த சிவலிங்கத்தின் சக்தியால் எல்லாப் போர்களிலும் வெற்றிபெறுகிறார். அந்தச் சிவலிங்கத்தின் மீது கொஞ்சம் சயின்ஸ் மசாலா தூவி நோய்களை நீக்கும் சக்தி வாய்ந்த விண்கல்லாக மாற்றி இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள்.

புதையல் தேடிப் புறப்படும் பல கதைகள் தமிழில் வெளிவந்திருந்தாலும், ஹாலிவுட் படங்களைப் போல எதையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. தொழில்நுட்பக் குறைபாடுகளால் சறுக்கிய தமிழ்ப் படங்கள் ஏராளம். ஆனால், 'இந்திரஜித்' படம் சிறந்த ஆக்ஷன் அட்வென்ச்சர் படமாக உருவாகியிருப்பதாகக் கூறப்பட்டது. ட்ரெக்கிங், சேஸிங் காட்சிகளும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருந்தன. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறதா 'இந்திரஜித்'?

தொல்லியல் துறையில் இயக்குநராக இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட ஒரு பேராசிரியருக்கு சூரியனிருந்து வெடித்துச் சிதறிய விண்கல் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. அந்த விண்கல் விழுந்த இடமே அடர் வனமாகும் அளவுக்கு அதற்குச் சக்தி உண்டு. அதன் மூலம் 400 ஆண்டுகளுக்கு மனிதர்களுக்கு எந்த நோயும் அண்டாமல் செய்ய முடியும். அவர் தனது மாணவர்களோடு 4 வருடங்களாக அந்த சக்திமிக்க கல்லைத் தேடுகிறார். இந்தக் குழுவிற்கு தற்போது தொல்லியல் துறை இயக்குநராகப் பணிபுரியும் சுதான்ஷு பாண்டே குடைச்சல் கொடுக்கிறார்.

பேராசிரியரின் விண்கல் தேடும் முயற்சியியில் அந்தக் குழுவோடு ஹீரோ கௌதம் கார்த்திக்கும் சேர்ந்து கொள்கிறார். பேராசியரின் உதவியால் கௌதம் கார்த்திக்கிற்கு விண்கல் இருக்கும் இடம் பற்றிய க்ளு கிடைக்கிறது. அதைக் கைப்பற்ற தொல்லியல் துறை இயக்குநர் சுதான்ஷு பாண்டேவும் முயற்சிக்கிறார். அவரது கடும் சேஸிங்கில் கௌதம் கார்த்திக்கின் பேராசிரியர் குழுவினர் தப்பித்து விண்கல்லைத் தேடிப் பயணப்படுகிறார்கள்.

அருணாசலப் பிரதேசத்தின் அடர்ந்த காட்டுப் பகுதியில் மாவோயிஸ்டுகள் இருக்கும் பகுதியில் அந்த விண்கல் இருப்பதாகத் தடயம் சொல்கிறது. அங்கே மாவோயிஸ்டுகள் இரு குழுக்களாக இருக்கிறார்கள். அவர்களில் ஒரு குழுவினருக்கு பலலட்சம் பணம் கொடுத்து குறிப்பிட்ட இடத்தைத் தேடுவதற்கு உதவி கேட்கிறார்கள். அந்த சக்திவாய்ந்த விண்கல்லைத் தேடிச் செல்லும்போது இன்னொரு பிரிவினரால் ஆபத்து ஏற்படுகிறது. அவர்களும் துரத்தத் தொடங்குகிறார்கள்.

இதற்கிடையே பேராசிரியரின் குழுவில் இருக்கும் ஒரு மாணவர் வில்லனுக்கு மறைமுகமாக உதவி செய்ய, அவர்களும் பின் தொடர்ந்து துரத்தத் தொடங்குகிறார்கள். காட்டுக்குள் கார் சேஸிங், ரைடிங் காட்சிகள் தொடர்கின்றன. தனது குழுவினருக்கு நிகழ்ந்த ஆபத்துகளை எல்லாம் சமாளித்த கௌதம் கார்த்திக் இறுதியில் அந்த விண்கல்லைக் கண்டுபிடித்தாரா, அதை என்ன செய்தார் என்பதுதான் க்ளைமாக்ஸ்.

காட்டுக்குள் நடக்கும் சேஸிங் காட்சிகளையும், அடர்ந்த காட்டின் ரம்மியத்தையும் அழகாகப் படம் பிடித்திருக்கிறது இராசாமதியின் கேமரா. பட்ஜெட் குறைவு என்பதால் ஹாலிவுட் படம் போல் உருவாக வேண்டிய கிராஃபிக்ஸ், VFX காட்சிகள் மிஸ்ஸிங். படத்தில் இடம்பெறும் பாம்பு, புலி காட்சிகள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும் பார்வையாளர்களுக்குள் எந்தப் பிரமிப்பையும் பயத்தையும் ஏற்படுத்தவில்லை என்பது பலவீனம். பின்னணி இசை இரைச்சலாகத் தொடர்கிறதே தவிர, சேஸிங் கதைக்கான எந்த த்ரில்லையும் ஏற்படுத்தவில்லை என்பதுதான் நிஜம்.

புதையல் தேடும் கதை, அதையும் அறிவியல் ரீதியாக மாற்றிய ஃபேன்டஸி கதை. எப்படி எல்லாமோ எடுக்கப்பட்டிருக்க வேண்டிய படத்தை முயன்று சொதப்பியிருக்கிறார்கள். படத்தின் நடிகர்கள் பலரும் தெரியாத முகங்கள் என்பதால் டப்பிங் படம் பார்ப்பதைப் போன்ற உணர்வைக் கொடுக்கிறது. புதையல் தேடும் குழுவினருக்கு எதிரிகள் தடைகளையும் சிக்கல்களையும் ஏற்படுத்துவதாகவும், அவற்றை ஹீரோ புத்திக் கூர்மையினால் கடந்து இலக்கை எட்டுவதாகவும் காட்சிகள் வைத்திருந்தால் இன்னும் விறுவிறுப்பு கூடியிருக்கும்.
திரைக்கதையின் வீரியமற்ற தன்மையாலேயே 'இந்திரஜித்' படத்தின் காட்சிகள் ரசிகர்களுக்குள் எந்த நெருக்கத்தையும் ஏற்படுத்தாமல் நழுவிச் செல்கின்றன. 'இண்டியானா ஜோன்ஸ்' போன்ற ஹாலிவுட் அட்வென்ச்சர் படங்களைத் தழுவி எடுத்திருக்கிறார்கள். ஆனால், அதற்கான மெனக்கெடல் இருந்தும் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்துகிற மாதிரியான ட்விஸ்ட்கள் இல்லாதது திரைக்கதைக்கு தொய்வை ஏற்படுத்துகிறது. பாடல்கள் மனதில் ஒட்டும்படியாக இல்லை.
சொனாரிகா பதோரியா, அஷ்ரிதா ஷெட்டி என இரண்டு ஹீரோயின்கள் இருந்தாலும் காதல், ரொமான்ஸ் காட்சிகள் மிகக் குறைவு. சொனாரிகா முதற்சில காட்சிகளில் மட்டும் வருகிறார். அஷ்ரிதா ஷெட்டி கௌதம் கார்த்திக் குழுவினருக்கு அருணாசலப் பிரதேசக் காடுகளில் உதவி செய்யும் பெண்ணாக வருகிறார். படம் பல எடிட்கள் கடந்து சுருங்கியிருப்பது தெளிவாகத் தெரிகிறது. திரைக்கதை, VFX காட்சிகளில் இன்னும் சிரத்தையோடு உழைத்திருந்தால் அட்வென்ச்சர் படங்களின் வகையில் சிறப்பாகப் பேசப்பட்டிருக்கும்.
தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, நடிகர் கார்த்திக், கவிஞர் அறிவுமதி ஆகியோரின் புதல்வர்கள் இணைந்து பணியாற்றிய இந்தப் படம் பத்தோடு பதினொன்றாக தமிழ் சினிமாவைக் கடந்து செல்கிறது. 'ஆக்ஷன் அட்வென்ச்சர் ஃபேன்டஸி' படவரிசையில் சிறந்த படத்தைப் பார்க்க தமிழ் ரசிகர்கள் இன்னும் காத்திருக்க வேண்டும் போல.


Click it and Unblock the Notifications











