இன்று நேற்று நாளை.. தமிழில் ஒரு "ஜாலிவுட்" பயணம்!
சென்னை: நேற்று திரைக்கு வந்த - இன்று நேற்று நாளை - நேற்று வெளியான புதிய படங்களிலேயே சற்று கவனம் ஈர்த்த படமாக உள்ளது.
விஷ்ணு விஷால், கருணாகரன், மியா ஜார்ஜ் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் .
நீங்கள் விரும்பியதை செய்யும் கால இயந்திரம் ஒன்று உங்கள் கைகளில் கிடைத்தால் நீங்கள் என்ன செய்வீர்கள். அதை வைத்து உங்கள் நிறைவேறாத ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். இன்னும் சிலபேர் அந்த இயந்திரத்தை வைத்து பணம் சம்பாதிக்கலாம் என்று ஆசைப்படுவீர்கள். அதையே தான் படத்தில் நிறைவேற்றிக் கொள்கிறார்கள் நாயகன் விஷ்ணு விஷாலும் காமெடியன் கருணாகரனும்.
படம் ஆரம்பிக்கும் போது நாயகன் ஆர்யா 2065 ம் ஆண்டில் உள்ள ஒரு விஞ்ஞானியாக வந்து கால இயந்திரத்தைக் கண்டுபிடித்து அதை, 2015 ம் ஆண்டிற்கு அனுப்பி பரிசோதிக்கிறார்.அந்த இயந்திரத்தைப் பற்றித் தெரிந்த ஒருவர் உதவியுடன் அது விஷ்ணு மற்றும் கருணாகரன் கைகளில் கிடைக்க, படம் ஸ்டார்ட்.

இன்று நேற்று நாளை
குடித்து விட்டுப் போட்ட மது பாட்டில்களை கழுவிப் புதிது போலாக்குவது போன்ற, தொழில் ஐடியாக்களை கைவசம் வைத்துக் கொண்டு பணம் இல்லாமல் தவிக்கிறார் விஷ்ணு. தனது ஜோதிடக் கடைக்கு ஆளே வராமல் ஈ ஓட்டிக் கொண்டு இருக்கிறார் கருணாகரன். இவர்கள் இருவர் கைகளிலும் கால இயந்திரம் கிடைக்க அதை வைத்து ஆரம்பத்தில் சிலபல வேலைகளைச் செய்து சொதப்புகிறார்கள் இருவரும்.

கூவிக் கூவி விளம்பரம்
மீண்டும் அடுத்த முயற்சியாக உங்கள் காணாமல் போன பொருட்களைத் தேடித் தருகிறோம் நீங்கள் செய்ய வேண்டியது தொலைந்து போன பொருட்களின் இடத்தையும் நேரத்தையும் மட்டுமே, என்று கூவிக்கூவி விளம்பரம் செய்கின்றனர் இருவரும்.

ரிப்பேராகிப் போன கால இயந்திரம்
கால இயந்திரத்தை வைத்து கட்டுக் கட்டாக பணத்தைச் சம்பாதிதுக் கொண்டு இருக்கும் போது, இவர்கள் செய்யும் ஒரு சிறு தவறால் இறந்து போன ரவுடி ஒருவன் உயிர்பெற்று எழுந்து வருகிறான். அவனால் விஷ்ணுவின் காதலி மியா ஜார்ஜ் குடும்பத்திற்கு ஆபத்து வருகிறது, அதே நேரத்தில் கால இயந்திரமும் பழுதாகி விட அதற்குப் பின் நிகழும் திக்திக் திகில் நிமிடங்களின் தொகுப்பாக இரண்டாம் பாதியும், கிளைமாக்சும் அமைந்து இருக்கிறது.

விஷ்ணு விஷால்
வழக்கம் போல இதிலும் கதையின் நாயகனாக விஷ்ணு, குடிப்பது வங்கிக் கடன் கேட்டு அலைவது, அழகான பெண்ணைக் காதலிப்பது இவற்றுடன் நடிக்கவும் செய்திருக்கிறார். கால இயந்திரத்தைப் பற்றி போனில் காதலி மியா ஜார்ஜிடம் சொல்ல அவர் குடிச்சிருக்கியா என்று கேட்பதும், போன்லேயே நான் குடிச்சது தெரியுதா என்று விஷ்ணு யோசிப்பதும் கலகல.

கருணாகரன்
படத்தின் பெரும் பங்கு கருணாகரன் தான் ஜோதிடம் பார்க்க யாரும் வராமல் ஈ ஓட்டிக் கொண்டிருப்பது, கால இயந்திரம் கைக்கு வந்ததும் அதை வைத்து சொதப்பலான ஐடியாக்களை முயற்சிப்பது என்று விஷ்ணுவுடன் சேர்ந்து ஜாலி பண்ணியிருக்கிறார். படத்திற்கு படம் உயர்ந்து கொண்டே செல்கிறது கருணாகரனின் கிராப்.

மியா ஜார்ஜ்
அமரகாவியம் சொதப்பினாலும் இன்று நேற்று நாளை படம் இவருக்கு கைகொடுத்திருக்கிறது. அழகாக வந்து, நடிப்பிலும் ஸ்கோர் செய்யும் மியா ஜார்ஜ் கடைசியில் இறந்து போய் பார்வையாளர்களை வருத்தப்பட வைத்து விடுகிறார்.

ஹிப்ஹாப் தமிழா
ஹிப்ஹாப் தமிழாவின் இசையில் பாடல்கள் பெரிதாக ஒன்றும் ஈர்க்கவில்லை, என்பது குறையே. பின்னணி இசை பொருத்தமாக அமைந்திருக்கிறது.

வெற்றி இயக்குநர் ரவிக்குமார்
கத்தி மீது நடப்பது போன்ற ஒரு கதையை எடுத்துக் கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் அறிமுக இயக்குநர் ரவிக்குமார். ரசிகர்களுக்கு கேள்விகள்,சந்தேகங்கள் எழுந்தாலும் அதை எதையும் கண்டுகொள்ளாத அளவுக்கு படத்தை ரசிக்க வைத்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











