இருமுகன்.. தொடரும் வசூல்... ரூ 50 கோடியைத் தாண்டியது!
விக்ரம நடித்த இருமுகன் படத்துக்கு வாரத்தின் தொடக்க நாளான திங்கள் கிழமையும் நல்ல வசூல் கிடைத்துள்ளது. அடுத்தடுத்து தொடர்ந்து இரு தினங்கள் (செவ்வாய், புதன்) விடுமுறை தினங்களாகவே வருவதால் படத்துக்கு எதிர்ப்பார்த்ததை விட நல்ல வசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா நடித்த இருமுகன் கடந்த வியாழன்று வெளியானது. முதல் நாளில் 5.5 கோடி ரூபாயை இந்தப் படம் தமிழகத்தில் மட்டும் வசூலித்ததாகவும், உலகெங்கும் 13 கோடியை வசூலித்ததாகவும் படத்தை வெளியிட்ட ஆரா சினிமாஸ் தகவல் வெளியிட்டது.

முதல் வார முடிவில் உலகெங்கும் இந்தப் படம் ரூ 50 ப்ளஸ் கோடி ரூபாயை வசூலாகப் பெற்றதாக தயாரிப்பாளர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆரம்ப வாரத்துக்குப் பிறகு வரும் இரண்டாவது வாரத்தின் முதல் நாள் இன்று. வேலை நாள்தான் என்றாலும் தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று படத்துக்கு நல்ல வசூல் கிடைத்துள்ளது. அடுத்து நாளையும் நாளை மறுநாளும் விடுமுறை என்பதால் படத்துக்கு வசூல் குறையாது என நம்புகின்றனர்.
இதன் மூலம் நடிகர் விக்ரம் தனக்கான இடத்தை பாக்ஸ் ஆபீஸில் உறுதி செய்துள்ளார். புலி படம் மூலம் பாதிப்படைந்த தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் இந்தப் படத்தில் மீண்டிருக்கிறார். முதல் முறையாக ஒரு பெரிய படத்தை விநியாகித்த ஆரா சினிமாஸ், தன் முயற்சியில் வெற்றியும் பெற்றுள்ளதாக
கோடம்பாக்கத்தில் பேசிக் கொள்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











