இருமுகன் பாக்ஸ் ஆபீஸ்... முதல் நாளில் மட்டும் ரூ 13 கோடி வசூலித்து சாதனை!
சென்னை: விக்ரம் நடிப்பில் வெளியாகியுள்ள இருமுகன் படம் முதல் நாளில் மட்டும் அனைத்து ஏரியாக்களிலும் ரூ 13 கோடி வசூலித்து சாதனைப் படைத்துள்ளது.
எந்த விசேஷமும் இல்லாத ஒரு சாதாரண நாளில் வெளியாகி இவ்வளவு வசூலித்த விக்ரம் படம் இருமுகன்தான் என்கின்றனர் பாக்ஸ் ஆபீஸ் வல்லுநர்கள்.

ஆனந்த் சங்கர் இயக்கத்தில் ஷிபு தமீன்ஸ் தயாரிப்பில் உருவான இருமுகனை ஆரா சினிமாஸ் வெளியிட்டது. தமிழகத்தில் மட்டும் 400 அரங்குகளுக்கு மேல் இருமுகனை வெளியிட்டனர் ஆரா சினிமாஸ். தமிழில் இந்த நிறுவனத்தின் முதல் பிரமாண்ட ரிலீஸ் இது.
முதல் நாளில் 3 முதல் 4 கோடி வரை இந்தப் படம் வசூலிக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்ப்பார்ப்புக்கும் மேல் ரூ 5.5 கோடியை தமிழகத்தில் இருமுகன் வசூலித்துள்ளது.
கிட்டத்தட்ட தமிழகத்துக்கு இணையாக தெலுங்கில் இந்தப் படத்துக்கு வசூல் கிடைத்துள்ளது. ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் மொத்தம் ரூ 4.75 கோடியை வசூலித்துள்ளது வியாழக்கிழமை மட்டும்.
கேரளாவிலும் நல்ல வசூல். ரூ 1.25 கோடி முதல் நாளில் கிடைத்துள்ளது. இங்கு தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸே படத்தை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்கா, பிரிட்டன், இலங்கை, வளைகுடா நாடுகள் போன்ற வெளிநாடுகளிலும் இந்தப் படம் நேற்று வெளியானது. அமெரிக்காவில் தமிழ் பதிப்பு மட்டுமே 90 அரங்குகளில் வெளியானது. வெளிநாடுகளில் மட்டும் மொத்தம் ரூ 1.75 கோடிகளை இருமுகன் வசூலித்துள்ளது.
ஐ -க்குப் பிறகு ஷங்கர் இயக்காத ஒரு விக்ரம் படம் இந்த அளவு முதல் நாள் வசூல் பார்த்திருப்பது இருமுகனில்தான். அந்த வகையில் பாக்ஸ் ஆபீஸில் விக்ரமின் அந்தஸ்தை மீட்டுக் கொடுத்திருக்கிறது இருமுகன் என்கிறார்கள்!


Click it and Unblock the Notifications











