விக்ரம் ஒவ்வொரு பந்திலும் சிக்ஸர் அடிப்பார் என நம்பினேன்! - தயாரிப்பாளர் ஷிபு
இருமுகன் படத்தில் விக்ரம் ஒவ்வொரு பந்திலும் சிக்ஸர் அடிப்பார் என நம்பினேன். அதுதான் நடந்தது என்று படத்தின் தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் கூறினார்.
விக்ரம் - நயன்தாரா நடித்து அண்மையில் வெளியாகியுள்ள படம் இருமுகன். அரிமா நம்பி படத்தை இயக்கிய ஆனந்த் ஷங்கர் இயக்கியுள்ளார்.

இருமுகன் கடந்த வியாழன் அன்று வெளியானது. முதல் இருநாள்களில் எதிர்மறையான விமரிசனங்கள் கிடைத்தாலும் படத்தின் வசூல் ஆரம்பத்திலிருந்தே நல்லவிதமாக இருந்தது. இதனால் படம் ஹிட் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
போட்டிக்கு வேறு படங்களே இல்லாத நிலையில், முதல் நாளில் வெளியான திரையரங்குகளைக் காட்டிலும் தற்போது அதிக திரையரங்குகளில், காட்சிகளில் படம் ஓடிக் கொண்டுள்ளது.

இப்படத்தின் வெற்றிக் கொண்டாட்ட நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அதில் படத்தில் பணியாற்றிய பிரபல கலைஞர்கள் கலந்துகொண்டார்கள்.
படத்தை வெளியிட்ட ஆரா சினிமாஸ் மகேஷ் கூறுகையில், "இந்த வருட ஹிட் படங்களில் கபாலி, தெறிக்குப் பிறகு அதிகம் வசூலித்த படம் இருமுகன். இரண்டாவது வாரத்தின்போது தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதே 450 திரையரங்குகளில் தொடர்ந்து திரையிடப்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டும் மொத்தமாக ரூ. 30 கோடி வசூலித்துள்ளது," என்றார்.

தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் பேசுகையில், "விக்ரம் தயாரிப்பாளர்களின் ஹீரோ. என்னை நம்பியதற்கும் இந்தப் படத்தைத் தயாரிக்கும் வாய்ப்பை அளித்ததற்கும் நன்றி என்றார். விக்ரம் ஒவ்வொரு பந்திலும் சிக்ஸர் அடிப்பார் என இப்படத்தின் கதையைக் கேட்கும்போதே தெரிந்தது. விக்ரம் போன்ற ஒரு நடிகரால் மட்டுமே இருமுகன் படத்தில் நடிக்கமுடியும்," என்றார்.


Click it and Unblock the Notifications











