ஜனவரி 29ல் வெளியாகிறது மாதவனின் இறுதிச்சுற்று
சென்னை: மாதவனின் நடிப்பில் நீண்ட நாட்களாக கிடப்பில் கிடந்த இறுதிச்சுற்று திரைப்படத்தை அடுத்த ஆண்டு ஜனவரி 29 ம் தேதியன்று வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருக்கின்றனர்.
அலைபாயுதே படத்தில் நடித்து இளம்பெண்களின் மனதைக் கவர்ந்த மாதவன் தற்போது நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தமிழில் இறுதிச்சுற்று என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

தமிழில் இறுதிச்சுற்று என்ற பெயரில் தயாராகி இருக்கும் இப்படம் ஹிந்தியில் சால கதூஸ் என்ற பெயரில் உருவாகி இருக்கிறது. இதில் மாதவனுடன் இணைந்து ரித்திகா சிங், மும்தாஜ் சொர்க்கர் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.
துரோகி படத்தைத் தொடர்ந்து சுதா கொங்கர பிரசாத் இயக்கியிருக்கும் இப்படத்தை சி.வி.குமாரின் திருகுமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும், சசிகாந்தின் ஒய் நாட் ஸ்டியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
தமிழில் யூடிவி நிறுவனம், ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை வெளியிடுகிறது. இதேபோல ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் இதன் ஹிந்திப் பதிப்பை வெளியிடுகிறது.
சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியிருக்கும் இறுதிச்சுற்றில் மாதவன் நீண்ட தலைமுடி, தாடி வைத்து குத்துச்சண்டை பயிற்சியாளராக நடித்துள்ளார்.
வெளியீட்டுத் தேதி உறுதியான நிலையில் தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் பரபரப்பாக நடந்து வருகின்றன. மாதவனின் நடிப்பில் தமிழில் கடைசியாக வேட்டை திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











