‘இது நம்ம ஆளு’ சிம்பு - நயனின் நிஜக் காதல் கதையா...: பாண்டிராஜ் விளக்கம்
சென்னை: சிம்பு - நயன்தாரா இணைந்து நடித்திருக்கும் இது நம்ம ஆளு படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் வெளியாகியுள்ளது.
வல்லவன் படத்தில் சேர்ந்து நடித்த சிம்பு - நயன்தாரா ஜோடி பின்னர் நிஜத்திலும் காதலித்து, பிரிந்தது உலகறிந்த செய்தி. நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த ஜோடி தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் இது நம்ம ஆளு படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.
மீண்டும் சிம்பு - நயன் இணைந்து நடித்துள்ளனர் என்பதே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. ஆனால், வாலு, வேட்டை மன்னன் போல் சிம்புவின் இப்பட ரிலீசும் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது.
இந்நிலையில், தி இந்து நாளிதழுக்கு இயக்குநர் பாண்டிராஜ் பேட்டியளித்துள்ளார். அதில், இது நம்ம ஆளு பட அனுபவங்களை அவர் தெரிவித்துள்ளார். இதோ அப்பேட்டியில் பாண்டிராஜ் கூறியிருப்பதாவது :-

நிஜக்கதையா...?
‘இது நம்ம ஆளு' படத்தின் டீசரைப் பார்க்கும்போது, இது சிம்பு-நயன்தாரா வுக்கு இடையே இருந்த நிஜமான காதல் கதையை வெளிக்காட்டுவதுபோல் தெரிகிறதே?
படம் பார்க்கும்போது அப்படித் தோன்றலாம். ஆனால் கண்டிப்பாக சிம்பு, நயனுக்காக ஒரு இடத்தில்கூட வசனத்தைச் சேர்க்கவில்லை. இது சிம்பு, நயன் இருவருக்குமே தெரியும். படத்தில் நிறைய இடங்களில் அவர்களுக்காகவே எழுதின மாதிரி தெரிந்தாலும், இது சாதாரண காதலன் - காதலிகளின் இயல்பான கேள்வி, பதில்கள்தான்.

சிம்புவும், நயனும் நல்ல நண்பர்கள்...
இந்தப் படத்தின் மூலம் இணைந்து நடித்த இருவரின் நட்பு, இப்போது எப்படி இருக்கிறது?
சிம்புவும் நயனும் பிரிந்துவிட்டார்கள், 7 ஆண்டுகளாக அவர்கள் பேசிக்கொள்ளவே இல்லை என்றெல்லாம் நாம்தான் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், அவர்கள் நல்ல புரிதல் உள்ள நண்பர்களாகத்தான் இருக்கிறார்கள். பிரிந்த பிறகும் இருவரும் பேசிக்கொண்டுதான் இருந்தார்கள்.

நடிப்பின் முதிர்ச்சி...
இந்தப் படத்தில் என் வேலை மிகவும் குறைவுதான். இரு வருக்கு மான காதல் காட்சிகளைப் பற்றி நான் பெரிதாக விளக்க வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது. அவர்களது முதிர்ச்சிதான் அதற்கு காரணம்.

நயனின் நேரந்தவறாமை...
நயன்தாரா சரியான நேரத்தில் படப்பிடிப்புக்கு வந்துவிடுவார். ஆனால் சிம்பு அதற்கு நேர் எதிராக செய்கிறார் என்று பரவலாக ஒரு பேச்சு இருக்கிறதே?
நயன்தாராவிடம் இந்தப் படத்துக்கு 15 நாட்கள் கால்ஷீட் பெற்று, 13 நாட்களிலேயே அவருடைய பகுதியை முடித்துவிட்டோம். 9 மணிக்கு படப்பிடிப்பு என்றால் அந்த நேரத்துக்குள் அவர் மேக்கப்புடன் தயாராக வந்து நின்றுவிடுவார். அவருடைய சினிமா பயணம் எந்த பாதிப்பும் இல்லாமல் தொடர்வதற்கு இது ஒரு முக்கிய காரணம்.

ஒரே டேக் தான்...
சிம்புவைப் பொறுத்த வரை அவர் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வருவதுதான் பிரச்சினை. வந்துவிட்டால் ஒரே டேக்தான். சிம்பு நடித்த படங்களிலேயே குறைந்த நாட்களில் படப்பிடிப்பை முடித்த படம் இது.

ரசிகர்களை ஏமாற்றக் கூடாது...
சரியான நேரத்துக்கு படப்பிடிப்புக்கு வருவதை மட்டும் அவர் கடைபிடித்தால் அவர் எங்கேயோ போய்விடுவார். இப்போதும்கூட 3 ஆண்டுகளுக்கு பிறகு சிம்பு படம் வந்தாலும் இதன் டீசரை அவரது ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்தனர் ரசிகர்கள் அந்த அளவுக்கு அவர்மீது எதிர்பார்ப்பு வைத்திருக்கிறார்கள். அந்த நம்பிக்கையை சிம்பு கெடுத்துக் கொள்ளக்கூடாது. ஆண்டுக்கு ஒரு படமாவது கொடுக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











