இளையராஜாவுக்கு பணத்தாசையா? - பிரதாப் போத்தன் தரும் பொளேர் பதில்
என் முதல் படத்துக்கு இளையராஜா பணம் பெறாமல்தான் இசையமைத்துக் கொடுத்தார். அவர் மாமேதை என்று கூறியுள்ளார் நடிகரும் இயக்குநருமான பிரதாப் போத்தன்.
எஸ்பிபி 50 நிகழ்ச்சியில் பாடப்படும் தன் பாடல்களுக்கு அனுமதி பெற வேண்டும், காப்புரிமைத் தொகை செலுத்த வேண்டும் என்று இளையராஜா தரப்பிலிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கு சட்ட ரீதியான தீர்வு காணத் தவறிய எஸ்பிபி, அந்த நோட்டீஸை பேஸ்புக்கில் வெளியிட்டு, இனி இளையராஜா பாடல்களைப் பாட மாட்டேன் என்று பரபரப்பு கிளப்ப, இந்த நிமிடம் வரை இணைய தளங்களிலும், டிவி விவாதங்களிலும் ரசிகர்கள் உணர்ச்சி மயமாகப் பேசி வருகிறார்.

இதில் கொடுமை என்னவென்றால், டிவி விவாத நிகழ்ச்சிகளில், இளையராஜா எழுப்பியுள்ள கேள்வி, காப்புரிமைப் பிரச்சினை என்பதெல்லாம் என்னவென்றே தெரியாத சிலர், நெறியாளர்களாக இருந்து கொண்டு வாய்க்கு வந்ததை பேசிக் கொண்டுள்ளனர். இவர்கள் அனைவரும் முன்வைக்கிர குற்றச்சாட்டு, இளையராஜாவுக்கு பணத்தாசை வந்துவிட்டது (என்னமோ மத்தவங்கள்லாம் ஒத்த பைசா வாங்காமல் ஓசியில் இசையமைப்பது, பாடுவது போல) என்பதே.
ஆனால் உண்மையில் இளையராஜா எப்படிப்பட்டவர், கலைஞர்களை - புதிய படைப்பாளிகளை எப்படி ஊக்கப்படுத்துபவர் என்பதை திரையுலகினர் பலர் மீடியாவில் கால காலமாகப் பகிர்ந்து வந்துள்ளனர். கால ஓட்டத்தில் அவற்றை வசதியாக மறந்துவிட்டது உலகம்.
ஆனால் இயக்குநரும் நடிகருமான பிரதாப் போத்தன், இளையராஜா எப்படி தனக்கு உதவினார் என்பதை பதிவு செய்துள்ளார்.
"என்னுடைய முதல் படமான மீண்டும் ஒரு காதல் கதைக்கு இளையராஜாதான் இசை. அந்தப் படத்துக்கு அவர் இலவசமாகத்தான் இசையமைத்துக் கொடுத்தார். இளையராஜாவை வேறு எவரோடும் ஒப்பிட வேண்டாம். அவர் ஜீனியஸ்.. பெரிய மேதை. அவரது இசைக் கோர்ப்புகளில்தான் அத்தனை பேரும் வாழ்கிறார்கள். அவரது மேதைமையை யாரும் மறுக்க வேண்டாம்," என்று கூறியுள்ளார்.
இந்தப் படத்தில் பாடிய எஸ்பிபி உள்ளிட்ட அத்தனைப் பேருக்கும் சம்பளம் கிடைக்கச் செய்த இளையராஜா, தான் மட்டும் வாங்கிக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இளையராஜாவின் இசையில் பெரிய வெற்றிப் படங்கள் தந்த ஆர்வி உதயகுமார் கூறுகையில், "ராஜா சார் பண விஷயத்தில் பெரிதாக கண்டுகொள்ளவே மாட்டார். என் படங்களில் கதையும் சூழலும்தான் அவருக்குப் பெரிதே தவிர, பணம் பெரிதல்ல. அவர் இன்றைக்கும் பிஸிதான். அன்றிலிருந்து இன்று வரை எத்தனையோ இயக்குநர்கள், தயாரிப்பாளர்களுக்கு பணம் வாங்காமல் இசையமைத்துக் கொடுத்திருக்கிறார் என்பதை என்னைப் போன்றவர்கள் மறக்க முடியாது," என்றார்.


Click it and Unblock the Notifications











