பிரசாத் ஸ்டூடியோவில்.. ரெக்கார்டிங் தியேட்டர் பூட்டு உடைப்பா? இசை அமைப்பாளர் இளையராஜா அதிர்ச்சி!
சென்னை: பிரசாத் ஸ்டூடியோவில் இளையராஜாவின் ரெக்கார்டிங் தியேட்டர் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் இளையராஜா அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இசையமைப்பாளர் இளையராஜா சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவின் ஒரு பகுதியில் ரெக்கார்டிங் ஸ்டூடியோவை நடத்தி வந்தார்.
சுமார் 35 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் இந்த இடத்தை பயன்படுத்தி வருகிறார்.

பிரசாத் ஸ்டூடியோ
இந்நிலையில் அந்த பகுதியை வேறு தேவைக்குப் பயன்படுத்த பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம் முடிவு செய்தது. இதையடுத்து ஸ்டூடியோ நிர்வாகத்துடன் இளையராஜாவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அவரை அந்த இடத்திலிருந்து ஸ்டூடியோ நிர்வாகம் வெளியேற்றியது. இதுகுறித்து இளையராஜா போலீசில் புகார் செய்தார்.

இளையராஜா வழக்கு
பின்னர், பிரசாத் ஸ்டூடியோவில் தான் வைத்திருக்கும் பொருட்களையும், இசைக் குறிப்புகளையும் எடுத்துக் கொள்ள அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இளையராஜா வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இருதரப்பும் சமரசமாகச் செல்லும்படி அறிவுறுத்தியது.

எப்போது அனுமதிப்பது
அதற்கு இரு தரப்பினருக்கும் உடன்பாடு ஏற்பட்டது. பிரசாத் ஸ்டூடியோ வளாகத்தில், காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இளையராஜாவை அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் தியானம் செய்யவும், பொருட்களை எடுத்துக் கொள்ளவும் அனுமதிக்க வேண்டும் என்றும் எப்போது அனுமதிப்பது என்பது குறித்து இரு தரப்பு வழக்கறிஞர்களும் முடிவு செய்துகொள்ளலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

வருவது ரத்து
அதன்படி இளையராஜா பிரசாத் ஸ்டூடியோவுக்கு இன்று வருவதாகக் கூறப்பட்டது. இதனால் ஸ்டூடியோ வாசலில் மீடியாவினர் குழுமியிருந்தனர். ஆனால், அவர் வரவில்லை. இது தொடர்பாக அவருடைய செய்தி தொடர்பாளர், இளையராஜா வருவது ரத்து செய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.

இளையராஜா அதிர்ச்சி
இந்நிலையில் அவருடைய பொருட்களை எடுத்துச் செல்ல இளையராஜாவின் வழக்கறிஞருடன் உதவியாளர்கள் வந்தனர். அவர்கள் தரப்பில் கூறும்போது, இளையராஜாவின் ரெக்கார்டிங் தியேட்டர் பூட்டு உடைக்கப்பட்டதாகவும் இதனால் இளையராஜா அதிர்ச்சி அடைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











