மணிரத்னம், ரசிகர்களை கோமாளி ஆக்காமலிருந்தால் சரி!
ஓ காதல் கண்மணி கொடுத்த தெம்பில் ரொம்பவே உற்சாகமாக உள்ள மணிரத்னம், தனது அடுத்த பட வேலைகளைத் தொடங்கிவிட்டார்.
இந்தப் படத்தில் கார்த்தி, துல்கர் சல்மான் நாயகர்களாக நடிப்பதாகவும், கீர்த்தி சுரேஷ் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வழக்கம்போல ஏ ஆர் ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறாராம்.

இவை அனைத்துமே ஹேஷ்யங்களாக வந்தவைதான். மணிரத்னமோ அவர் அலுவலகமோ எந்த தகவலையும் அதிகாரப்பூர்வமாகக் கொடுக்கவில்லை. அது அவர்கள் வழக்கமும் இல்லை.
மணிரத்னம் படத்தைப் பொருத்தவரை, காற்றுவாக்கில் வருவது போலத்தான் செய்திகள் வந்து கொண்டிருக்கும். ஆனால் கடைசியில் அவையெல்லாம் உண்மையாகவே இருக்கும்.
இந்த நிலையில் அவர் படத்தின் தலைப்பு கோமாளி என்று ஒரு செய்தி நேற்று கசிந்தது. உடனே அலறியடித்துக் கொண்டு மறுப்பு வெளியிட்டுள்ளார் மணிரத்னம்.
"இது முற்றிலும் தவறான செய்தி, எப்படி இந்தப்பெயர் வந்ததென்று தெரியவில்லை என்று ஆச்சரியப்படுவதோடு, படத்தின் பெயர் மற்றும் நடிகர்கள் பற்றி நாங்களே அறிவிப்போம்!" என்று கூறியுள்ளார் அவர்.
ஆனால் உண்மையில் கோமாளி என்ற தலைப்பை மணிரத்னம்தான் சில ஆண்டுகளுக்கு முன் தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்து வைத்துள்ளாராம்!


Click it and Unblock the Notifications











