ரஜினியின் அடுத்த படத்தை இயக்குகிறார் பி வாசு?
ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப் போகிறவர் யார் என்ற கேள்வி இப்போது தீவிரமடைந்துள்ளது.
ஏற்கெனவே ஷங்கர், கேஎஸ் ரவிக்குமார் பெயர்கள் இடம்பெற்றிருந்த பட்டியலில் இப்போது பி வாசு பெயரும் சேர்ந்துள்ளது.

ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘லிங்கா'. இப்படம் மெகா ஹிட் என தயாரிப்பாளர்கள் இன்றைய விளம்பரத்தில் அறிவித்திருந்தாலும், சிலர் தொடர்ந்து வசூல் குறித்து சர்ச்சை கிளப்பி வருகின்றனர்.
இந்த நிலையில்தான், ரஜினியின் அடுத்த படம் குறித்த கேள்வி எழுந்துள்ளது. லிங்காவுக்குப் பிறகு மீண்டும் கே எஸ் ரவிக்குமார் இயக்குவார் என்று முன்பு கூறப்பட்டது.
ஆனால் அவர் ஷங்கர் இயக்கத்தில் ‘எந்திரன்' படத்தின் 2-ம் பாகத்தில் நடிப்பார் என்றார்கள்.
இதனை உறுதிப்படுத்துவதுபோல, ஷங்கரைச் சந்தித்து கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார் ரஜினி.
இந்த நிலையில் ரஜினியின் அடுத்த படத்தை பிரபல இயக்குனர் பி.வாசு இயக்கப் போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
ஏற்கெனவே, பி.வாசு-ரஜினி கூட்டணியில் பணக்காரன், மன்னன், உழைப்பாளி, சந்திரமுகி மற்றும் குசேலன் என 5 படங்கள் வந்துள்ளன.
‘பாபா' படம் பின்னடைவைத் தந்தபோது, ரஜினிக்கு மெகா ஹிட்டாக அமைந்த சந்திரமுகியை இயக்கியவர் வாசு.
சமீபத்தில் பி.வாசு சொன்ன கதை பிடித்துவிட்டதாகவும், ரஜினியும் சம்மதம் கூறிவிட்டதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. ஆனால் எதுவும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.


Click it and Unblock the Notifications











