’விக்ரம்’ பிரமாண்ட வெற்றி அசைத்துப்பார்க்கிறதா? போட்டி கோதாவில் ரஜினிகாந்த்..? சட்டென எழுமா குதிரை?
சென்னை: ரஜினிகாந்த் சமீப காலமாக தனது பழைய படங்களை மீண்டும் விளம்பரப்படுத்துவதும் அப்படக்குழுவினரை சந்திப்பதும் என வேகம் காட்டுகிறார்.
விக்ரம் பட வெற்றி அவரை அசைத்து பார்த்துள்ளதா? தனது இருப்பை தக்க வைத்துக்கொள்ள முயல்கிறாரா என்கிற கேள்வி சினிமா வட்டாரத்தில் எழுந்துள்ளது.
இன்று அண்ணாமலை 30 வது ஆண்டு விழாவை ரஜினி திரும்பி பார்த்துள்ளார். இது திரைத்துறையினருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாபா தந்த பாடம்
ரஜினிகாந்த் தொடர் வெற்றிக்களுக்கு இடையே பாபா படத்தை பாட்சா வெற்றி இயக்குநர் சுரேஷ்கிருஷ்ணாவை வைத்து எடுத்தார். படத்தில் கவுண்டமணி, மனீஷா கொய்ரலா போன்றோர் இருந்தாலும் ரஜினியின் திடீர் மெலிந்த தோற்றம், தாடியுடன் டல்லாக இருப்பதுபோல் அமைக்கப்பட்ட காட்சிகள், வழக்கமான ரஜினி படம் போல் அல்லாமல் தெய்வம் போல் சித்தரிக்கும் கதைக்களன் காரணமாக படம் தோல்வியடைந்தது.

அவ்வளவுதான் ரஜினி பரவிய விமர்சனம்
இதனால் ரஜினி இனி அவ்வளவுதான், வயதாகிவிட்டது என்றெல்லாம் இண்டஸ்ட்ரியில் பேச்சு அடிபட தொடங்கியது. இதைப்பார்த்த ரஜினி சிவாஜி பிலிம்சுக்காக பி.வாசு இயக்கத்தில் சந்திரமுகி படத்துக்கு கால்ஷீட் கொடுத்தார். படத்தில் நடிக்க வடிவேலுவை புக்பண்ணுங்கன்னு கேட்டுக்கொண்டார். ஜோதிகாவுக்கு பிரதான பாத்திரம், படத்தில் ரஜினியின் வழக்கமான கதை இல்லாவிட்டாலும் பாடல்கள், நகைச்சுவை காட்சிகளால் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. பாபாவுக்கும் சேர்த்து 800 நாட்கள் ஓடியது.

நான் யானை அல்ல குதிரை ஆரவாரம் காட்டிய ரஜினி
இந்தப்படத்தின் வெற்றிவிழாவில் பேசிய ரஜினிகாந்த் தனது உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தினார். பொதுவாக வெற்றி தோல்விகள் பற்றி அதிகம் பேசாத ரஜினி அன்று பேசிய வார்த்தைகள் அவர் எவ்வளவு மனதளவில் பாதிக்கப்பட்டிருந்தார் சத்திரமுகி வெற்றி அவருக்கு என்ன மனநிலையை தந்துள்ளது என்பதை காட்டியது. "பாபா' படம் சரியாக போகவில்லை. ஓஹோ... அண்ணன் ஆடிப் போய்விட்டார் என்று நினைத்தார்கள். நான் யானை அல்ல குதிரை. யானை விழுந்தால், எழுந்து கொள்ள நேரம் ஆகும். நான் குதிரை என்பதால், உடனே எழுந்து கொண்டேன்" என்று பேசினார்.

சினிமாவில் ரஜினி கணக்கு எப்போதும் வெற்றிக்கணக்கே
ரஜினி அரசியலில் தப்புக்கணக்கு போட்டிருக்கலாம் ஆனால் சினிமாவில் என்றுமே அவர் கணக்கு தப்பிப்போனது கிடையாது. ராஜசேகர் தொடங்கி சுரேஷ் கிருஷ்ணா, ஆர்.வி.உதயகுமார், கே.எஸ்.ரவிகுமார், ஷங்கர், பா.ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ், சிறுத்தை சிவா, தற்போது நெல்சன் என காலத்துக்கு ஏற்றாற்போல் இயக்குநர்களை ட்ரெண்டுக்காக தேர்வு செய்வது அதில் வெற்றியும் காண்பது ரஜினியின் வழக்கம். தான் உண்டு தனது வேலையுண்டு என போவதால் எந்த பெரிய நிறுவனமும் இவரை வைத்து தைரியமாக படம் பண்ணி லாபம் பார்க்க தயங்குவதில்லை.

எம்ஜிஆருக்கு அடுத்த முடிசூடா மன்னன் ரஜினி
அதேபோல் தனது வெற்றிக்கான ஆட்கள், தனது பலத்துக்கேற்ற படம் தயாரிக்கும் நிறுவனம், இயக்குநர் என தேர்வு செய்வதில் ரஜினி தேர்ந்த மனிதர். இப்பவும் அவரிடம் கதைச் சொல்லி காத்துக்கிடக்கும் நெம்பர் ஒன் இயக்குநர்கள் லிஸ்ட் உள்ளது. ராஜமவுலியே கதைப்பண்ண துடித்த மனிதர் ரஜினி. பான் இந்தியா படம், மெகா பட்ஜெட் படம், பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் படம் என்பதெல்லாம் ஒரு படத்தில் மட்டுமே வெற்றியை பார்ப்பவர்களுக்கு மட்டுமே. தமிழ் திரையுலகில் எம்ஜிஆருக்கு அடுத்து முடிசூடா மன்னன் வசூல் சக்ரவர்த்தி ரஜினி மட்டுமே.

70 வயதிலும் முன்னணியில் மூச்சிரைக்காமல் ஓடும் குதிரை
மெகா ஹிட் என்பது ரஜினி சாதாரணமாக பார்க்கும் ஒன்று. படம் சரியில்லன்னு விமர்சனங்கள் வரும்போதே அதன் வசூல் நிலவரம் முதல் படத்தின் சாதனையை முறியடித்திருக்கும். இப்போதும் சம்பளம், படவசூல், ஓவர்சீஸ் ரசிகர்களில் முதலிடத்தில் இருப்பது ரஜினி மட்டுமே. ரஜினியை நெருங்க முடியாமலே விஜய், அஜித் திரை வாழ்க்கையில் பாதிகாலம் ஓடிவிட்டது எனலாம். அந்த குதிரை 70 வயதிலும் மூச்சிரைக்காமல் வெற்றிக்கோட்டை நோக்கி ஓடிக்கொண்டே இருக்கிறது.

கமல் கொடுத்த மெகா ஹிட் விக்ரம்
சமீபத்தில் ரஜினியின் திரையுலக போட்டியாளர் கமல் 4 ஆண்டு இடைவெளியில் ரஜினி பாணியில் இளம் இயக்குநரை வைத்து இளம் கதாநாயகர்களுடன் இணைந்து மிக எதிர்ப்பார்ப்புடன் கூடிய ஒரு படத்தை கொடுத்தார், தனது விக்ரம் படப்பெயரிலேயே வெளிவந்த படத்தில் கமலின் இயல்பான ஒன்றுதலுடன் கூடிய ஆக்ஷன் கலந்த நடிப்பு, மற்றவர்களை நடிக்க வைத்த விதம் லோகேஷ் கனகராஜை சுதந்திரமாக செயல்பட விட்டவிதம் மிகப்பெரிய பிளாக் பஸ்டர் படமாக 400 கோடி ரூபாய் கனவில் படம் இணைந்துள்ளது.

தமிழ் திரையுலக மானம் காத்த விக்ரமின் வெற்றி
கமலின் விக்ரம் பட வெற்றி ஆர்.ஆர்.ஆர், கேஜிஎஃப், புஷ்பா படங்களை எடுத்து தமிழில் திறமையானவர்களே இல்லையா என திருவிளையாடம் பட பாகவதர்போல சவால் விட சிவபெருமான் போல தோன்றி அடித்து துவம்சம் செய்து தமிழில் தான் ரஜினி, கமல், பார்த்திபன், இளையராஜா, ரஹ்மான் போன்ற மெகா லெஜண்டுகள் இருக்கிறார்கள் எனக்காட்டிவிட்டார். இப்ப என்னவென்றால் ரஜினிக்கு பிரச்சினை ஆரம்பித்துவிட்டது.

இமேஜ் பற்றி கவலைப்படாத ரஜினியா இப்படி
எப்போதும் வெற்றிபற்றியோ தோல்வி பற்றியோ இமேஜ் பற்றியோ துளியும் கவலைப்படாத ரஜினியையே இந்த சமூக வலைதள ஊடகங்கள் அசைத்துவிட்டன எனலாம். சமீப காலமாக ரஜினிகாந்த் ஒரு சிறந்த பிளாக் பஸ்டர் படத்தை கொடுக்கும் முனைப்பில் இருக்கிறார். பீஸ்ட் படத்தின் மீதான விமர்சனம் நெல்சன் மீது பாய அவரை மாற்றிவிடாமல் அவருக்கு உதவ கே.எஸ்.ரவிகுமார், பொன் குமரன் ஆகியோரை சேர்த்து கதையை வலுவாக்க சொல்லியிருக்கிறார்.

வெற்றியை சுவைக்க வேகம் காட்டும் ரஜினி
படத்தின் மீது அக்கறை காட்டும் அதே நேரம் பூக்கடைக்கு விளம்பரம் தேவைப்படாத ரஜினியே தற்போது தனது பழைய படங்களின் வெற்றி நாட்களை நினைவுகூறும் சம்பவங்களுடன் சம்பந்தப்பட்டவர்களுடன் போட்டொ எடுப்பது, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அதை கொண்டாடும் வகையில் சிவாஜி, எந்திரன் இன்று அண்ணாமலை வரை விளம்பரம் ட்விட்டரில் தெறிக்கிறது. இவைகளை வைத்து பார்க்கும்போது கமலின் வெற்றி ரஜினியை லேசாக அசைத்து பார்த்துள்ளதோ என எண்ணத்தான் தோன்றுகிறது என்கின்றனர் திரைத்துறையினர். ரஜினி பாணியில் சொன்னால், "குதிரை சட்டென எழுந்துக்கொள்ளும்".


Click it and Unblock the Notifications











