OTT-யில் 2 படங்களை வெளியிட்டதால் வசூலில் பாதிப்பா? - எதற்கும் துணிந்தவன் வசூல் குறையக் காரணம் என்ன?
சென்னை: நடிகர் அஜித் குமாரின் வலிமை திரைப்படம் முதல் நாளில் 36.17 கோடி ரூபாய் வசூல் ஈட்டி சாதனை செய்த நிலையில், சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெறும் 9 கோடி ரூபாய் மட்டுமே முதல் நாளில் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பு என்றதுமே சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்திற்கு புரமோஷன் மற்றும் அதிகளவிலான தியேட்டர்களில் வெளியாவதில் எந்தவொரு சிக்கலும் இல்லை என சூர்யா ரசிகர்கள் நினைத்தனர்.
படம் மிகப்பெரிய அளவு வசூல் ஈட்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வசூல் இந்த அளவுக்கு குறைய காரணம் ஒடிடியில் சூர்யாவின் இரண்டு படங்கள் வெளியானது தான் என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

வலிமை வசூல்
அஜித் குமார் நடிப்பில் கடந்த பிப்ரவரி 24ம் தேதி வெளியான வலிமை திரைப்படம் முதல் நாளில் அதிக அளவிலான திரையரங்குகளில் வெளியாகி முதல் நாளில் இதுவரை எந்தவொரு தமிழ் படமும் வசூல் செய்யாத வகையில் 36.17 கோடி ரூபாய் வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகின. 3வது வாரத்திலும் 200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் வலிமை திரைப்படம் 200 கோடி ரூபாய் வசூலை உலகளவில் எட்டியிருப்பதாக கூறப்படுகிறது.

தியேட்டர் ரிலீஸ்
சூர்யாவை பெரிய திரையில் பார்க்க முடியவில்லையே என வருத்தப்பட்டு காத்திருந்த சூர்யா ரசிகர்கள் எதற்கும் துணிந்தவன் தியேட்டர் ரிலீஸ் என்றதுமே மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் சாதனையை நிகழ்த்துவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எதற்கும் துணிந்தவன் தமிழ்நாட்டில் அதிகளவிலான தியேட்டர்களில் வெளியாகவில்லை என்கிற அறிவிப்புகள் ரசிகர்களை அப்செட் செய்தன.

அரசியல் அழுத்தம்
சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தை தியேட்டரில் திரையிடக் கூடாது என பல மாவட்டங்களில் பாமகவினர் பிரச்சனை செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன் காரணமாக வலிமை திரைப்படத்தை மூன்றாவது வாரமும் ஓட்ட தியேட்டர் அதிபர்கள் வேறு வழியின்றி முடிவெடுத்ததே எதற்கும் துணிந்தவன் வசூல் பாதிப்புக்கு பெரிய காரணம் எனக் கூறப்படுகிறது.

ஓடிடி ரிலீஸ் பிரச்சனை
சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில் வெளியான பல படங்கள் தியேட்டரில் வெளியாகாமல் நேரடியாக அமேசான் பிரைம் ஒடிடியில் வெளியானது. மேலும், சூர்யா நடித்த சூரரைப் போற்று மற்றும் ஜெய்பீம் உள்ளிட்ட இரு படங்களும் நேரடியாக ஓடிடியில் வெளியாகின. இதன் காரணமாக கூட பல திரையரங்குகள் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தை வாங்கி வெளியிட முடியாமல் பின் வாங்கி விட்டன என்றும் கூறப்படுகிறது.

ஃபேன் பேஸ்
அஜித், விஜய்க்கு இருக்கும் அளவுக்கு நடிகர் சூர்யாவுக்கு அவ்வளவு பெரிய ஃபேன் பேஸ் இல்லாததும் எதற்கும் துணிந்தவன் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் வெறும் 9 கோடிக்கு குறைய காரணம் எனக் கூறப்படுகிறது. ஆலியா பட்டின் கங்குபாய் கத்தியவாடி படமே முதல் நாளில் 10 கோடி ரூபாய் வசூலை ஈட்டியிருந்ததாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது. ஆனால், சூர்யா படத்துக்கு இந்த வசூல் இழப்பு இல்லை என்றும் நல்ல ஓப்பனிங் என்று தான் திருப்பூர் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் தெரிவித்துள்ளனர்.
Recommended Video

நிச்சயம் அதிகரிக்கும்
சூர்யாவுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஏகப்பட்ட தடைகளும் பிரச்சனைகளும் எழுந்தது தான் இந்த படம் முதல் நாளில் பெரிய வசூலை பெற முடியாததற்கு காரணம் என்றும் படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல டாக் இருப்பதால், முதல் வார முடிவில் தியேட்டர்களும் காட்சிகளும் அதிகரித்து படத்தின் வசூல் மேலும், அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











