இஸ்ரோவின் மிஷன் சந்திராயன் 90 சதவிகிதம் வெற்றிதான் - நடிகர் மாதவன்
சென்னை: இஸ்ரோவின் முயற்சி என்றுமே நமது வரலாற்றில் செதுக்கப்படும். சந்திரனை சுற்றிவரும் ஆர்பிட்டர் வெற்றிகரமாக இன்னும் சுற்றி வருகிறது. எனவே இந்த மிஷன் 90% வெற்றியே என்று நடிகர் மாதவன் தனது ஆதரவை ட்வீட் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
ஒட்டுமொத்த இந்திய தேசமும் சந்திராயன்-2 விண்கலம் சந்திரனில் தரையிறங்கும் காட்சிகளை பார்ப்பதற்காக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த வேளையில் சந்திராயன்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் ஆர்பிட்டரை சுற்றுவதை நிறுத்தி, சந்திரனில் தரையிறங்க இருந்தபோது தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

இது சற்று கவலையை அளித்தாலும் விஞ்ஞானிகளின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. பிரதமர் மோடியும் விஞ்ஞானிகளின் தோளில் தட்டிக்கொடுத்து ஆறுதல் படுத்தியதோடு ஊக்கமும் நம்பிக்கையும் அளித்துள்ளார். இந்த பணியை வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்று இரவு பகலாக கடுமையாக உழைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளின் முயற்சி 90% வெற்றி.
இந்த நிகழ்வு குறித்து பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார். அதில் விஞ்ஞானிகள் தங்களது நம்பிக்கையை இழந்து விட வேண்டாம். தங்களது பணியை நம்பிக்கையோடு மீண்டும் முயற்சிக்க வேண்டும் என்றார்.
விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானிகளுக்கு பொதுமக்களும், பிரபலங்கள் பலரும் சமூக ஊடகங்கள் மூலம் வாழ்த்து தெரிவித்து அவர்களுக்கு ஆதரவாக ட்வீட் செய்து வருகின்றனர்.
நடிகர் கமல்ஹாசன், நடிகர் மாதவன், நடிகை குஷ்பூ போன்ற பலரும் ட்விட்டர் மூலம் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். அதில் கமல்ஹாசன், இது தோல்வியே அல்ல. ஆராய்ச்சி மற்றும் அதன் மேம்பாட்டில் கற்றுக்கொள்வது என்பதன் ஒரு பகுதி.
இதுவும் ஒரு கற்கும் தருணமே. முழு முயற்சியோடு மீண்டும் சந்திரனில் வெற்றிகரமாக தரையிறங்குவோம். நங்கள் இஸ்ரோவை முழுமையாக நம்புகிறோம். எங்களது பாராட்டுகளும் ஆதரவும் என்றென்றும் விண்வெளி விஞ்ஞானிகளுக்கு இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் நடிகர் மாதவனும் சந்திராயன்-2 முயற்சிக்கு மரியாதையும் பாராட்டையும் தெரிவித்தார். இந்த முயற்சி என்றுமே நமது வரலாற்றில் செதுக்கப்படும். சந்திரனை சுற்றிவரும் ஆர்பிட்டர் வெற்றிகரமாக இன்னும் சுற்றி வருகிறது. எனவே இந்த மிஷன் 90% வெற்றியே என்று தனது ஆதரவை ட்வீட் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். மேலும் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனுடன் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை போஸ்ட் செய்துள்ளார்.
மேலும் நடிகர் மாதவன் ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் எனும் விண்வெளி ஆராய்ச்சி குறித்த ஒரு படத்தை இயக்கி வருகிறார். இஸ்ரோ மையத்தின் முன்னாள் விஞ்ஞானி மற்றும் விண்வெளிப் பொறியாளரான நம்பி நாராயணன் அவர்களின் வாழ்க்கை வரலாறு அடிப்படையாக கொண்டு எடுக்கப்படும் படம்.
இப்படம் தமிழ், இந்தி, ஆங்கிலம் என மூன்று மொழிகளில் தயாராகி வருகிறது. இப்படத்தில் நடிகை சிம்ரன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார். இப்படத்தின் வெளியீடு குறித்து எந்த தகவலும் இதுவரையில் வெளியாகவில்லை. விண்வெளி ஆராய்ச்சி குறித்த படம் என்பதால் மக்களிடமும் குழந்தைகளிடமும் நல்ல வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











