மீண்டும் என்ட்ரி கொடுக்கும் கவுண்டமணி… அதுவும் இப்படியொரு கேரக்டரா?: டைரக்டருக்கு செம்ம தில்லு தான்!
சென்னை: தமிழ்த் திரையுலகில் எத்தனை காமெடி நடிகர்கள் இருந்தாலும் கவுண்டமணிக்கு நிகராக இங்கே யாரும் கிடையாது என்பதே ரசிகர்களின் கருத்து.
சூப்பர் ஸ்டார் ரஜினி முதல் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு வரை அனைத்து நடிகர்களுடனும் நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளார்.
சில வருடங்களாக நடிப்பில் இருந்து ஒதுங்கியுள்ள கவுண்டமணி மீண்டும் கேமரா முன் வர முடிவு செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

நக்கல் மன்னன்
கொங்கு தமிழ், நக்கல் பேச்சு, டைமிங்கில் கவுண்டர் என தமிழ்த் திரையுலகையே தனது காமெடிக்குள் வசியப்படுத்தி வைத்திருந்தவர் கவுண்டமணி. ரசிகர்களால் செல்லமாக நக்கல் மன்னன் என அழைக்கப்பட்ட கவுண்டமணி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு வரை டாப் ஹீரோக்களுடன் காமெடியில் கலாட்டா செய்துள்ளார். நாடகங்கள் மூலம் சினிமாவில் அறிமுகமான கவுண்டமணி திரையுலகில் தொட்ட உச்சம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.

சிவகார்த்திகேயனின் விருப்பம்
கவுண்டமணியுடன் நெருங்கிய நட்பில் இருப்பவர்களில் சத்யராஜும் முக்கியமானவர். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சத்யராஜுடன் நடித்த சிவகார்த்திகேயன், பிரேக் டைமில் அவரிடம் அதிகம் கேட்டது கவுண்டமணியை பற்றி தான். இதனை சத்யராஜ் பல இடங்களில் கூறியுள்ளார். இந்நிலையில், சிவகார்த்திகேயனுக்கு அவரது படத்தில் கவுண்டமணியும் நடிக்க வேண்டும் என ரொம்பவே ஆசையாம். இதற்காக கவுண்டமணியிடம் பேச்சுவார்த்தை நடந்துவருவதாக சொல்லப்படுகிறது.

மீண்டும் திரைக்கு வரும் கவுண்டர்
2004ம் ஆண்டு சிம்புவின் நடிப்பில் வெளியான மன்மதன் படத்தில், அவருக்கு மாமாவாக நடித்திருந்தார் கவுண்டமணி. அதன்பின்னர் ஒருசில படங்களில் மட்டுமே நடித்து வந்த கவுண்டமணி, கடைசியாக '49-O', 'எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது' படங்களில் ஹீரோவாக நடித்திருந்தார். அதன் பின் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டு வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். இந்நிலையில், சிவகார்த்திகேயனின் படத்தில் கவுண்டமணியை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்துகொண்டிருக்கும் அதேநேரம், இன்னொரு படத்தில் ஹீரோவாக நடிக்க அவர் கமிட் ஆகியுள்ளாராம்.

ரசிகர்கள் கொண்டாட்டம்
கவுண்டமணி மீண்டும் ஹீரோவாக நடிக்கவுள்ளதாக வெளியான தகவல், ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 'பழனிச்சாமி வாத்தியார்' என்ற டைட்டிலில் உருவாகும் இந்தப் படத்தை, செல்வ அன்பரசன் என்பவர் இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. கவுண்டமணி கால்ஷீட் கொடுத்துவிட்டால், விரைவில் இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. வடிவேலு மீண்டும் நடிக்க வந்துவிட்ட நிலையில், கவுண்டமணியும் கம்பேக் கொடுக்க வேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. அதேபோல், சிவகார்த்திகேயனுடன் கவுண்டமணி இணைந்து நடிக்க வேண்டும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











