கதையிலும் பஞ்சாயத்து... பட்ஜெட்டிலும் தகராறு: அட்லீயை டீல் செய்ய திணறும் ஷாருக்கான்
மும்பை: பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் தற்போது பதான், ஜவான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
அட்லீ இயக்கும் ஜவான் படத்தில் ஷாருக்கானுடன் நயன்தாரா, விஜய் சேதுபதி, பிரியாமணி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
பிரம்மாண்டமாக உருவாகும் ஜவான் படத்தை ஷாருக்கானே தயாரித்து வரும் நிலையில் தற்போது அட்லீயுடன் மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாலிவுட் போன அட்லீ
ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என ஹிட் படங்களை கொடுத்த அட்லீ, ஷாருக்கானை இயக்க வேண்டும் என்ற ஆசையில் பாலிவுட் சென்றார். அதன்படி ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கும் ஜவான் படம் தொடங்கப்பட்டது. ஆனால், தொடங்கிய சில நாட்களிலேயே ஷாருக்கானின் மகன் போதை மருந்து வழக்கில் சிக்கிவிட, ஜவான் அப்படியே கிடப்பில் கிடந்தது. இந்நிலையில், மீண்டும் படப்பிடிப்பை தொடங்கிய ஜவான் படக்குழு, மும்பை, சென்னை என பறந்துகொண்டிருக்கிறது.

கதை திருட்டு பஞ்சாயத்து
சென்னையிலும் 30 நாட்களுக்கு மேலாக ஜவான் படப்பிடிப்பு நடைபெற்றது. அப்போது சென்னை வந்து சென்ற அனுபவத்தை ஷாருக்கானும் டிவிட்டரில் ஷேர் செய்திருந்தார். இதனையடுத்து ஜவான் படத்தின் கதை விஜயகாந்தின் பேரரசு படத்தின் அப்பட்டமான காப்பி என பஞ்சாயத்துக்கு வந்தது. 2006ம் ஆண்டு வெளியான விஜயகாந்தின் பேரரசு படத்தை உதயன் இயக்கியிருந்தார். அட்லீயின் படங்கள் எப்போதும் கதை திருட்டில் சிக்கி வருவது வழக்கம் தான். ஆனால், ஜவான் படத்தின் கதை திருட்டு விவகாரத்தை பெரிதாக்க பேரரசு படக்குழுவினர் முடிவு செய்துள்ளார்களாம்.

பட்ஜெட்டில் தகராறு
இந்நிலையில், தற்போது ஜவான் படத்தின் பட்ஜெட்டிலும் அட்லீயால் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாம். ஜவான் படத்துக்கு சொன்னதை விட அதிகமாக செலவை இழுத்துவிடுகிறாராம் அட்லீ. ஏற்கனவே இதுகுறித்து அட்லீயை ஷாருக்கான் ஒன்றிரண்டு முறை எச்சரித்தும் அவர் அடங்குவதாக இல்லையாம். சமீபத்திலும் தேவையே இல்லாமல் செலவு செய்து ஷாருக்கானை டென்ஷன் ஆக்கியுள்ளாராம் அட்லீ. இதனால் ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே ஷாருக்கான் - அட்லீ இடையே மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஜவான் திரைப்படம் எதிர்பார்த்த மாதிரி நிறைவு பெறுமா என்றும் சந்தேகம் எழுந்துள்ளது.

தொடரும் குற்றச்சாட்டு
ஷங்கரின் அசிஸ்டென்ட் என்ற அடையாளத்தோடு இயக்குநராக அறிமுகமான அட்லீ, ஆரம்பத்தில் இருந்தே கதை திருட்டு பிரச்சினையில், சிக்கி வருகிறார். அதேபோல், படத்தின் பட்ஜெட் விசயத்திலும் தயாரிப்பாளருக்கு அதிகமான செலவை இழுத்து விடுவதாக பலமுறை புகார்கள் வந்துள்ளன. முக்கியமாக மெர்சல் படத்தின் பட்ஜெட்டிலும் சொன்னதை விட தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனத்தை அதிகம் செலவழிக்க வைத்ததாக அப்போது சொல்லப்பட்டது.. ஜவான் படம் தொடங்கியதில் இருந்தே பிரச்சினைகளை சந்தித்து வரும் நிலையில், அதன் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வருமா வராதா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











