முடிவுக்கு வந்த வாரிசு பஞ்சாயத்து… விஜய்யை தடுக்க முடியாதுன்னு அந்த பிரபலம் சொன்னது சரியா போச்சு…
சென்னை: விஜய்யின் வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகுமா ஆகாதா என ரசிகர்கள் பெரிய கலக்கத்தில் இருந்தனர். .
தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் எடுத்துள்ள முடிவால், வாரிசு படத்தின் ரிலீஸ் தள்ளிப் போகலாம் என்றும் சொல்லப்பட்டது.
இந்த பிரச்சினை தொடர்பாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர், தெலுங்கு தயாரிப்பாளர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் பஞ்சாயத்து முடிவுக்கு வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

வாரிசுக்கு கட்டுப்பாடு போட்ட டோலிவுட்
விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.. வம்ஷி பைடிபள்ளி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்தப் படம், பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால், சங்கராந்தி போன்ற பண்டிகை காலங்களில், நேரடி தெலுங்கு படங்களுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும் என தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் கூறியிருந்தது. இதனால் விஜய்யின் வாரிசு ஆந்திரா, தெலங்கானாவில் உள்ள திரையரங்குகளில் வெளியாகுமா என சந்தேகம் ஏற்பட்டது.

சீனியர் நடிகர்கள் தான் பிரச்சினை
வாரிசு தெலுங்கில் வாரசுடு என்ற டைட்டிலில் உருவாகியுள்ளது. முக்கியமாக இந்தப் படத்தின் இயக்குநர் வம்ஷி பைடிபள்ளி, தயாரிப்பாளர் தில் ராஜூ இருவருமே தெலுங்கு திரையுலகைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி இருந்தும் வாரிசு ரிலீஸுக்கு பிரச்சினை கொடுப்பது, தெலுங்கு சீனியர் நடிகர்கள் தான் சொல்லப்படுகிறது. சிரஞ்சீவின் வால்டையர் வீரய்யா, பாலகிருஷ்ணாவின் வீர சிம்ஹா ரெட்டி படங்களும் பொங்கலுக்கு வெளியாகிறது. இந்நிலையில், விஜய்யின் வாரிசும் பொங்கலுக்கு ரிலீஸானால், அது அவர்களது படத்தின் வசூலை பாதிக்கும் என்பதால், இந்த பிரச்சினையை எழுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

பஞ்சாயத்து முடிந்தது
இதனிடையே வாரிசு படத்தின் ரிலீஸுக்கு ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் தமிழ்நாட்டிலும் தெலுங்கு படங்கள் ரிலீஸாவதில் பிரச்சினை வரும் என சீமான் தெரிவித்திருந்தார். மேலும், விஜய்க்கு ஆதரவாக லிங்குசாமி, பேரரசு, உள்ளிட்ட கோலிவுட் பிரபலங்கள் குரல் கொடுத்தனர். அதேநேரம், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் தேனாண்டாள் முரளி, சென்னையில் இயங்கி வரும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் நிர்வாகிகளிடம் வாரிசு ரிலீஸ் குறித்து பேசியுள்ளார். அப்போது தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை நிர்வாகிகள், தெலுங்கு தயாரிப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக சொல்லப்படுகிறது.

சம்மதம் சொன்ன டோலிவுட்
இதனையடுத்து வாரிசு திரைப்படத்திற்கு ஆந்திரா தெலங்கானாவில், எந்த சிக்கலும் இருக்காது என தெலுங்கு தயாரிப்பாளர்கள் உறுதி அளித்துள்ளனர். இதனால், அந்த இரண்டு மாநிலங்களிலும் விஜய்யின் வாரிசு வெளியாவதில் சிக்கல் இருக்காது என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளும் கூறியுள்ளனர். இதனால் கடந்த 2 வாரங்களாக நிலவி வந்த வாரிசு ரிலீஸ் பிரச்சினை முடிவுக்கு வந்தது. வாரிசு படத்தின் ரிலீஸுக்கு இருந்த பிரச்சினை எல்லாம் முடிந்ததால், விஜய் ரசிகர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.

அன்றே சொன்ன பிரபலம்
முன்னதாக வாரிசு ரிலீஸுக்கு ஏற்பட்ட பிரச்சினையின் போது, தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த அல்லு அரவிந்த் கருத்து தெரிவித்து இருந்தார். பிரபல தெலுங்கு தயாரிப்பாளர், விநியோகஸ்தர், நடிகர் அல்லு அர்ஜுனின் தந்தையான அல்லு அரவிந்த் தான் அவர். விஜய்யின் ரிலீஸை தடுக்க சாத்தியமே இல்லை, அது ஒருபோதும் நடக்காது. விஜய்யின் வாரிசு ரிலீஸாவதை யாராலும் தடுக்க முடியாது?" எனக் கூறியிருந்தார். இப்போது அவர் சொன்னபடியே இப்போது பிரச்சினை முடிவுக்கு வந்தது


Click it and Unblock the Notifications











