உங்க நடிப்புல அந்த கதாபாத்திரத்தை கலந்தா நல்லா இருக்கும்... தனுஷ் எதார்த்த நடிப்பிற்கு இதுதான் காரணமாம்
சென்னை: மிகப் பெரிய வெற்றியடைந்த திருச்சிற்றம்பலம் திரைப்படத்தை இயக்கியிருந்தவர் இயக்குநர் மித்ரன் ஜவஹர்.
யாரடி நீ மோகினி, உத்தம புத்திரன், குட்டி போன்ற திரைப்படங்களை இதற்கு முன்னர் நடிகர் தனுஷ் வைத்து இயக்கியுள்ளார்.
செல்வராகவனிடம் துணை இயக்குநராக பணியாற்றிய இவர், சமீபத்தில் கொடுத்துள்ள பேட்டியில் பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.

குரு செல்வராகவன்
இயக்குநர் செல்வராகனுடன் பணிபுரியும்போது நிறைய தன்னம்பிக்கை கிடைக்கும். அவர் பெரிதாக எதையும் கற்றுக் கொடுக்க மாட்டார். ஆனால், நமக்கு முன் யார் இருந்தாலும் பயப்படக்கூடாது என்பதை மட்டும் சொல்லிக் கொடுத்தார். இயக்குநர் கே.பாலச்சந்தர்தான் செல்வராகவனுக்கு அதனை சொல்லிக் கொடுட்த்தாராம். அப்போதுதான், எதிரில் இருப்பவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அவர்களிடம் வேலை வாங்க முடியும் என்று பாலச்சந்தர் சொல்லி கொடுத்ததை எனக்கு சொல்லிக் கொடுத்தார்,

யாரடி நீ மோகினி
யாரடி நீ மோகினி படத்தை தெலுங்கு திரைப்படத்திலிருந்து அப்படியே தமிழில் ரீமேக் செய்யவில்லை. கடைசி 15 நிமிடங்கள் வேறு திரைக்கதையை எழுதிக் கொடுத்தார் செல்வராகவன். அந்த சமயத்தில் யுவன் சங்கர் ராஜா பிசியாக இருந்ததால் பின்னணி இசைக்கும் பாலக்காட்டு பக்கத்திலே பாடல் ரீமிக்ஸிற்கு மட்டும் இமான் இசையமைத்து கொடுத்தார்.

ரகுவரன்
ரகுவரன், வில்லனாக மட்டும் இல்லாமல் அவர் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும் எனக்கு பிடிக்கும் என்பதால் அவர்தான் அப்பாவாக நடிக்க வேண்டும் என்று நான் பிடிவாதமாக இருந்தேன். அவருடன் வேலை செய்வது கடுமையாக இருக்கும் என்று கூறினார்கள். இருப்பினும் அவரை ஒப்பந்தம் செய்தேன். ஆனால், அவர் மிக ஆர்வமாக பணிபுரிந்தார். ஆக்சன் என்று சொல்லிவிட்டால் ஒரு மேஜிக்கை நிகழ்த்தி காட்டுவார். அது அத்தோடு நிற்காமல், எடிட்டிங்கில் வேறு மேஜிக்கை செய்யும். டப்பிங்கில் மேலும் அதனை மெருகேற்றுவார் என்று ரகுவரனை பற்றி கூறியுள்ளார்.

தனுஷ் நடிப்பு
தெலுங்கு படத்தில் வெங்கடேஷ் காமெடி காட்சிகளில் வேகமாக நடித்திருந்தார். தமிழில் தனுஷ் நடிப்பு கொஞ்சம் நிதானமாக இருந்தது. அவரிடம் இன்னும் கொஞ்சம் வேகம் இருக்கலாம் என்று கூறி, அவர் நடித்த திருவிளையாடல் திரைப்படத்தின் திரு கதாபாத்திரத்தை சற்று கலந்து நடிக்கச் சொன்னேன். அப்படி நடித்ததைத்தான் நீங்கள் படத்தில் பார்க்கிறீர்கள். செல்வராகவன் அந்தக் கதையை எழுதும்போது இது தனுஷிற்கான கதை என்று கூறுவார். படம் பார்க்கும்போது அது நன்றாகவே தெரிந்தது. பலரும் தெலுங்கு பதிப்பை விட தமிழ் பதிப்புதான் நன்றாக இருந்தது என்று பாராட்டினார்கள் என ஜவகர் கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











